மல்லிகையே ஓ மல்லிகையே..!

Feb 17, 2026,02:35 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


மல்லிகைப் பூ‌ என்றாலே‌ மதுரை தான். மதுரை‌ மல்லிகைப்பூவின் மணமே‌ தனி‌ தான்.... நான் பிறந்ததும் மதுரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் தான்... அங்கே மல்லிகைப்பூ தோட்டம் நிறைய‌ இருக்கும். அந்த தோட்டத்தில் மல்லிகைப் பூ பறிக்க காலை 5 மணிக்கு எவ்லாம்‌ பெண்கள் மற்றும் சிறுமிகள் செல்வார்கள்....


நானும் என் தோழிகளுடன் சென்றிருக்கிறேன்.


ஆகா என்ன ஒரு அற்புதமான காட்சி.... அந்த இருட்டிலும் ஒவ்வொரு செடியிலும் வெள்ளைவெளேரென மல்லிகை மொட்டுக்கள் பூத்துக் குலுங்கும்.....


ஆளுக்கு ஒரு நிரையை எடுத்துக் கொண்டு பறிக்க ஆரம்பித்து விடுவோம்....




தினமும் நாங்கள் பறித்துக் கொடுக்கும் பூக்களின் எடையைக் குறித்து வைத்துக் கொண்டு வாரம் ஒரு முறை காசு கொடுப்பார்கள்.


(பூப்பெறக்குறது மட்டுமல்ல  கடலைச்செடி பிடுங்குறது கடலை உடைக்கிறது வேப்பம் பழம் பெறக்குறது  கோரைக்கிழங்கு எடுக்குறது. ஈசல் பிடிக்கிறது. ஆத்துல நீச்சல் அடிக்கிறது.... இன்னும் பல)


கிராமத்தில் உள்ள அனுபவங்கள் தற்போது நகரத்தில் வாழும் நம் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லையே என்று நினைக்கும் போது கவலையாகத்தான்‌ இருக்கிறது.


இருக்கட்டும்....

நான் மல்லிகைப்பூவுக்கு வந்துடறேன்....


மல்லிகைப்பூ மதுரையில் சரியான விலைக்கு போகவில்லை என்றால் மூட்டையோடு எங்களுக்கு கொடுத்து விடுவார்கள். தெருவில் உள்ள பெண்கள் அனைவரும் மல்லிகைப்பூவைக் கட்டியும் கோர்த்தும் வித விதமாக தலை வாரி அழகாக மல்லிகைப்பூவை சூடிக்கொண்டு சுற்றுவோம்....


சாயந்திரம் தோட்டத்தில் இருக்கும் மலர்ந்த பூவை யார் வேண்டுமானாலும் பறிக்கலாம். அதையும் விட்டு வைக்க மாட்டோம்....


எங்கள் ஊரில் பூக்கடையில் மல்லிகைப்பூவை 100,200 என்று எண்ணி தான் கொடுப்பார்கள்.

முழம் கணக்கு அங்கு இல்லை. கதம்பம் மட்டுமே முழம் போட்டுக் கொடுப்பார்கள்...

மல்லிகைப்பூவை நெருக்கம் நெருக்கமாக கட்டி விற்பார்கள்...

பார்க்கவே அழகாக இருக்கும்......


மல்லிகைப்பூ என்றவுடன் மறக்க முடியாத மற்றும் ஒரு அனுபவமும்  உண்டு.


என் கைப்பட பறித்து நானே கட்டிய மல்லிகைப்பூ மாலையை எடுத்துக்கொண்டு திருப்பரங்குன்றம் முருகன் 

கோவிலுக்குச் சென்று இருந்தேன்.... தொடர்ந்து மூன்று செவ்வாய்க்கிழமை திருப்பரங்குன்றம் முருகப் பெருமானைக் கன்னிப்பெண்கள் சென்று தரிசித்தால் உடனே திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்....


நான்‌ கொண்டு சென்ற மல்லிகைப்பூ மாலையை முருகனின் கழுத்தில் அணிவித்தார் அந்த சாமி. ஆகா ...இதை விட ஒரு பாக்கியம்‌ இனி‌ எனக்கு வேண்டுமா!!!!


அடுத்த வாரமே என் மாமாவுடனான திருமணம் முருகனின் அருளால் நிச்சயிக்கப்பட்டது.


மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவனைச் சூடித்தந்த மல்லிகையே!!!!!


எனக்கு இப்போது ஒரு விசயம் புரிந்து விட்டது.என் அப்பன்‌ முருகனுக்கும் மல்லிகைப்பூ என்றால் இஷ்டம் என்று....!


மதுரை மல்லிகைப்பூ‌ மாலையுடன்‌ சென்று திருப்பரங்குன்றம் முருகப் பெருமானை வணங்கி மணமாலையை சூடிக் கொள்ளுங்கள்‌ மங்கையரே!!!!!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்