தேனி: வைகை அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை எதிரொலியாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 64 அடியாக உள்ளது. விரைவில் முழு கொள்ளளவான 71 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அநேக இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நான்கு நாட்களாக காலையில் வெட்கை நிலவுவதுடன் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் சென்று வருவதற்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. மழைநீர் செல்ல முடியாத இடங்களில் கழிவுநீர் அகற்றும் குழாய் மூலம் மழை நீரை அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் தேனி மாவட்டம் வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான மேகமலை, வெள்ளிமலை, கோடி கொட்டக்குடி ஆறு மற்றும் சுருளி அருவிப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக வைகை ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வைகை அணை நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
வைகை அணையின் முழு கொள்ளளவு 71 அடி ஆகும். தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் அணையின் நீர் மட்டம் 64 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டும் போது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்.
தேனி மாவட்டத்தில் பரவலாக இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு முதல் போக பாசனத்திற்கு அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}