- ப.ந. ராஜேஷ் கண்ணா
இன்றைய இயந்திரமயமான உலகில் நாம் நம்முடைய தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும் மெல்ல மெல்ல இழந்து வருகிறோம் என்பது கசப்பான உண்மை. காலமாற்றத்தின் வேகத்தில் அடித்துச் செல்லப்படும் நாம், நம்முடைய அடையாளங்களை விட தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும், மேலைநாட்டு கலாச்சாரத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கிவிட்டோம்.
கூட்டுக்குடும்பச் சிதைவு முதல் உணவுப் பழக்கவழக்க மாற்றம் வரை அனைத்தும் நம்மை ஒரு பொதுவான வார்ப்பிற்குள் (Template) அடைத்து வருகின்றன. இதனால் மனிதர்களிடையே நிலவ வேண்டிய உண்மையான அன்பும், புரிந்துணர்வும் குறைந்து, அனைவரும் ஒரு போட்டிக்களத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரங்களாக மாறிவிட்டோம். போட்டிகள் நிறைந்த 21ம் நூற்றாண்டில் வசித்து வருகிறோம்.நம் வேர்களைத் தேடிச் சென்று மீட்டெடுப்பதே இழந்த பாரம்பரியத்தைத் திரும்பப் பெறுவதற்கான ஒரே வழியாகும்.
தகவல் தொடர்பு சாதனங்களின் தாக்கம்
தகவல் தொடர்பு சாதனங்கள் உலகத்தை நம் விரல் நுனியில் கொண்டு வந்தாலும், அவை மனிதர்களுக்கிடையிலான நேரடித் தொடர்பைத் துண்டித்துவிட்டன. இன்று பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசுவதை விட, எங்கோ இருப்பவர்களிடம் அலைபேசியில் உரையாடுவதற்கே மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். திரைகளில் மூழ்கிக் கிடப்பதால் படைப்பாற்றலும், சிந்திக்கும் திறனும் குறைந்து, மற்றவர்கள் செய்வதையே நாமும் செய்யும் மனநிலை உருவாகியுள்ளது. இது நம்முடைய தனிப்பட்ட ரசனையையும், தனித்துவமான சிந்தனைகளையும் மழுங்கச் செய்கிறது.
பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் துரித உணவு

நவீன வாழ்வின் அங்கமாக மாறிவிட்ட பிளாஸ்டிக் மற்றும் துரித உணவுகள் நம் உடல் நலத்தையும், சூழலியல் தனித்துவத்தையும் அழித்து வருகின்றன. பாரம்பரியமான மண் பாண்டங்கள் மற்றும் இலை உணவுகளை மறந்து, பிளாஸ்டிக் பைகளுக்கும், ரசாயனம் கலந்த உணவுகளுக்கும் நாம் அடிமையாகிவிட்டோம். நம் மண்ணுக்கே உரிய சத்தான உணவு முறைகளை விடுத்து, மேலைநாட்டு 'ஜங்க்' உணவுகளைத் தேடிச் செல்வது நம்முடைய ஆரோக்கியமான வாழ்வியல் அடையாளத்தை சிதைத்துவிட்டது.
குடும்பச் சூழல் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு:
பொருளாதாரத் தேவைகளுக்காக கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது இன்றைய சூழலில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதனால், தங்களின் பிஞ்சுப் பிள்ளைகளுடன் தரமான நேரத்தைச் செலவிட முடியாமல் பெற்றோர்கள் தவிக்கின்றனர். அன்பையும் அரவணைப்பையும் அனுபவிக்க வேண்டிய பருவத்தில், குழந்தைகள் காப்பகங்களிலும் அல்லது மின்னணு சாதனங்களின் துணையோடும் வளர்வது அவர்களின் ஆளுமைத் திறனைப் பாதிக்கிறது.
கூட்டுக்குடும்பச் சிதைவு:
ஆலமரம் போல இருந்த கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து, இன்று தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்டன. தாத்தா, பாட்டிகளின் கதைகளும், அவர்கள் புகட்டிய அறநெறிகளும் இன்றைய குழந்தைகளுக்குக் கிடைக்காமல் போவதற்கு இதுவே முக்கியக் காரணமாகும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் பண்பும், பகிர்ந்துண்ணும் பழக்கமும் குறைந்து 'நான், எனது' என்ற சுயநலப் போக்கு மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
உறவுகளும் திருவிழாக்களும்:
உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட, சமூக அந்தஸ்திற்கும் பணத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் போக்கு வளர்ந்து வருகிறது. ஊர் திருவிழாக்களில் கலந்து கொண்டு உறவினர்களுடன் உறவாடிய காலம் மறைந்து, இன்று விடுமுறை நாட்களைச் சுற்றுலாத் தலங்களில் மட்டும் கழிக்கிறோம். இத்தகைய விழாக்களில் நாம் பங்கேற்காததால், நம் பாரம்பரிய கலைகளும், சடங்குகளும், சமூக ஒற்றுமையும் நம்மை விட்டு மெல்ல விலகிச் செல்கின்றன.
பெரியவர்களிடம் நடந்து கொள்ளும் முறை:
வீட்டில் பெரியவர்கள் இல்லாத சூழலால், அடுத்த தலைமுறைக்கு ஒழுக்க நெறிகளைக் கற்றுக்கொடுக்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரியவர்களை எப்படி மதிக்க வேண்டும், யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்ற அடிப்படைப் பண்புகள் குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. வெறும் கல்வி அறிவு மட்டுமே வாழ்க்கையல்ல, பெரியவர்களின் அனுபவப் பாடங்களே ஒருவனை முழுமையான மனிதனாக்கும் என்பதை உணர்த்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
(ப ந ராஜேஷ் கண்ணா, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி, திருவூர், திருவள்ளூர் மாவட்டம்)
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}