தெய்வமும் பெண்ணும்!

Apr 30, 2026,01:04 PM IST

- வே. ஜெயந்தி


எங்கும் கோயில்கள்

அம்மன் பெயரில்,

ஆனால்

வீடுகளில்

பெண்ணுக்கு

ஒரு மூலையும் இல்லை.


கர்ப்பகிரகத்தில்

அவள் சக்தி,

சமையலறையில்

அவள் கடமை.


பூமியைத் தாங்கும்

தாயை வணங்கினோம்,

ஆனால்

அவள் கருத்தைத் தாங்க

மனம் வளர்க்கவில்லை.




நீரை அருளும்

மாரியம்மன்,

நீதியை வழங்கும்

காளி

அவள் கோபம்

தெய்வீகம்.


அதே கோபம்

பெண்ணிடம் வந்தால்

“அடக்கம் இல்லை”

என்று தீர்ப்பு.


விரதம் இருந்தாள்,

பூஜை செய்தாள்,

விளக்கேற்றினாள்

ஆனால்

கேள்வி கேட்டால்

பாவி ஆனாள்.


வழிபாட்டில்

அவள் அவசியம்,

முடிவுகளில்

அவள் தேவையில்லை.

பெண்ணை

தெய்வமாக வைத்தோம்,

மனிதராக

வாழ விடவில்லை.


இப்போது

அம்மனிடம் கேட்கிறேன்

என்னை வணங்கும்

இந்த மனிதன்

என் மகளுக்கும்

உன் சக்தியை

அனுமதிப்பானா?


(V. JAYANTHI , Graduate teacher , Creative writer, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்