Sripriya Story: தன்னம்பிக்கை தந்த தடம்!

Apr 30, 2026,11:12 AM IST

- பன்முகத்  திறமையாளர் ச. ஸ்ரீபிரியா  பழனிவேலு, பட்டுக்கோட்டை


காவேரி கிராமத்துப் பெண். அப்பா கூலி வேலை. அம்மா பீடி சுற்றுவாள். வீட்டில் வறுமை. ஆனால் காவேரியின் கண்களில் மட்டும் கனவு. படித்து ஆசிரியை ஆக வேண்டும் என்பதே அவள் லட்சியம்.


பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண். ஊரே பாராட்டியது. ஆனால் உறவினர்கள் சிலர் கேலி பேசினர். “பொம்பளப் பிள்ளைக்கு என்னத்துக்குப் படிப்பு? பத்தாவது போதும். கல்யாணம் பண்ணி அனுப்பு” என்றார்கள். அப்பாவும் அசைந்தார். “நமக்கு அவ்வளவுதான் தகுதி” என்றார்.


காவேரி அழவில்லை. அன்று இரவு முழுவதும் யோசித்தாள். விடிந்ததும் அப்பாவிடம் ஒரே ஒரு வார்த்தை சொன்னாள். “ஒரு வருஷம் அப்பா. நான் +2 முடிச்சு, கல்லூரியில் சேர்ந்து, அரசு உதவித்தொகை வாங்கிக் காட்டுறேன். அதுக்கு அப்புறமும் உங்களுக்குப் பிடிக்கலைன்னா, நீங்க சொல்ற மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டுறேன்.”


அந்தத் துணிச்சலில் அப்பா மௌனமானார். சம்மதம்.




+1, +2 படித்தாள். பகலில் பள்ளி. மாலையில் அம்மாவுக்கு பீடி சுற்ற உதவி. இரவில் மண்ணெண்ணெய் விளக்கில் படிப்பு. கண்கள் எரியும். கை விரல்கள் காய்க்கும். ஆனால் மனம் சோரவில்லை.


+2 தேர்வில் மாவட்டத்தில் மூன்றாம் இடம். செய்தித்தாளில் பெயர் வந்தது. அரசுக் கல்லூரியில் இலவச இடம். கல்வி உதவித்தொகை. முதல் மாதம் உதவித்தொகை பணத்தில் அப்பாவுக்கு வேட்டியும், அம்மாவுக்குச் சேலையும் வாங்கிக் கொடுத்தாள்.


கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கேட்டார், “உனக்கு ஆங்கிலம் சரியா வராதே. எப்படிச் சமாளிப்ப?”  

காவேரி சொன்னாள், “ஐயா, எனக்குத் தமிழ் நல்லா வரும். ஆங்கிலம் வரவைக்கிறேன். எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு.”


தினமும் அகராதி வைத்து 5 சொல் படித்தாள். கண்ணாடி முன் நின்று ஆங்கிலத்தில் பேசிப் பழகினாள். முதலில் தோழிகள் சிரித்தார்கள். பிறகு வியந்தார்கள்.


B.Ed முடித்தாள். TET தேர்வு எழுதினாள். முதல் முயற்சியிலேயே தேர்ச்சி. இன்று அதே கிராமத்து அரசுப் பள்ளியில் ஆசிரியை.


ஒருநாள் பள்ளி ஆண்டு விழா. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா? “பொம்பளப் பிள்ளைக்கு என்ன படிப்பு?” என்று கேட்ட அதே உறவினர். மேடையில் காவேரி மைக் பிடித்தாள்.


“என்னைப் படிக்க வைக்காதே என்று சொன்னவர்களுக்கு நன்றி. நீங்க அப்படிச் சொன்னதால்தான் நான் படிக்கணும்னு பிடிவாதம் வந்தது. இன்று நான் 40 பிள்ளைகளுக்குச் சோறு போடல. அறிவு போடுறேன். அதுதான் நிரந்தரம்.”


சபை எழுந்து கைதட்டியது. அப்பாவின் கண்களில் கண்ணீர். பெருமைக் கண்ணீர்.


நீதி: வாய்ப்புகள் வராது. நாம்தான் உருவாக்க வேண்டும். உலகம் ‘முடியாது’ என்று சொல்லும்போது, உன் மனசு ‘முடியும்’ என்று சொன்னால் போதும். அதுதான் தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை இருந்தால், கல்லும் கூட படிக்கட்டு ஆகும்.


அனுபவம்: என் வாழ்க்கையில் நான் கற்றது இதுதான். அடுத்தவர் கைதட்ட வேண்டும் என்று காத்திருக்காதே. நீ முதலில் உன்னை நம்பு. நீ நடக்க ஆரம்பித்தால், வழி தானாகத் தெரியும். விழுந்தாலும் எழுந்திரு. ஏனென்றால் உன் தடம் வேறு யாருக்கோ பாதையாகும்.


(பன்முகத் திறமையாளர் ச. ஸ்ரீபிரியா பழனிவேலு, உதவித் தலைமையாசிரியர், பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி , பட்டுக்கோட்டை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்