டெல்லி: ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவராக ஒய்எஸ்ஆர் சர்மிளாவை நியமித்துள்ளது காங்கிரஸ் மேலிடம். இதனால் அந்த மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு சரியான டஃப் கொடுக்க முடியும் என்று காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர், சர்மிளாவின் கூடப் பிறந்த அண்ணன் ஜெகன் மோகன் என்பதும், அவர்தான் ஆந்திர மாநில முதல்வராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநில முதல்வராக, காங்கிரஸ் தலைவராக இருந்தவர் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. விமான விபத்தில் அவர் உயிரிழந்ததும் அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி தனிக் கட்சி தொடங்கினார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை நிறுவி ஆந்திர மாநிலத்தில் ஆட்சியையும் பிடித்தார்.

அவருடன் ஆரம்பத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார் சர்மிளா. ஆனால் பின்னர் அண்ணனுடன் மனக்கசப்பு ஏற்படவே தனியாக பிரிந்து வந்தார். தெலங்கானாவில் தனிக் கட்சி ஆரம்பித்து நடத்தி வந்தார். ஆனால் அவரது கட்சியால் பெரிய அளவில் எதையும் சாதிக்க முடியவில்லை.
இந்த நிலையில் அங்கு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸுக்கு ஆதரவு தருவதாக அறிவித்தார். அவரது கட்சியும் தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தலுக்குப் பின்னர் கட்சியை காங்கிரஸுடன் இணைத்து விட்டார், அவரும் காங்கிரஸில் இணைந்தார்.
தற்போது சர்மிளாவை, ஆந்திரப் பிரதேச மாநில அரசியலுக்குள் இறக்கியுள்ளது காங்கிரஸ் மேலிடம். அவரை கட்சியின் ஆந்திர மாநில தலைவராக அறிவித்துள்ளது காங்கிரஸ். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தீவிரமாக களமாடி வருகிறது. மறுபக்கம் பாஜகவும் தன்னைப் பலப்படுத்திக் கொண்டு ஜெகன்மோகனை முடக்கிப் போட காத்திருக்கிறது. அக்கட்சியின் மாநிலத் தலைவராக சில மாதங்களுக்கு முன்புதான் மறைந்த என்டிஆரின் மகள் புரந்தேஸ்வரி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போதும் காங்கிரஸ் கட்சியும் ஜெகன் மோகனுக்கு எதிரான முஸ்தீபுகளுடன் களம் குதித்துள்ளது.
ஜெகன் மோகனின் சொந்த தங்கையே மாநில காங்கிரஸ் தலைவராக வந்திருப்பதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். கண்டிப்பாக ஜெகன் மோகனுக்கு இது பெரும் தர்மசங்கடமாக இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். சர்மிளாவும் போர்க்குணம் படைத்தவர்தான். அவரும் அதிரடி அரசியலில் ஈடுபடுவார் என்பதால் களம் படு சூடாகும் வாய்ப்புள்ளது.

சர்மிளாவுக்கு ஆதரவாக அவரது தாயாரும் களம் இறங்கலாம் என்று கருதப்படுகிறது. ராஜசேகர ரெட்டியின் பழைய ஆதரவாளர்கள், சர்மிளாவுக்கு ஆதரவாக திரும்பக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் அது ஜெகன்மோகனுக்கு பெரும் சிக்கலாக மாறும்.
சர்மிளாவின் தலைமையில் ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் எப்படி செயல்படப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.
இதற்கிடையே, இதுவரை ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வந்த ருத்ரரராஜு கிடுகு, காங்கிரஸ் மேலிட அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}