ஆளுநர் தகுதியை ஆர். என். ரவி இழந்து விட்டார் - ஜனாதிபதிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Jul 09, 2023,05:12 PM IST

சென்னை: தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தொடர்ந்து துரோகம் செய்து வரும் ஆர். என். ரவி தற்போது அரசியல்வாதியாக மாற ஆரம்பித்துள்ளார். அவர் இனியும் உயர் பதவியில் தொடர தகுதி இல்லாதவர் என்பதை அவரே நிரூபித்துள்ளார். அவரை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


19 பக்கங்களில் முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள இந்தக் கடிதத்தில் ஆளுநர் ஆர். என். ரவி குறித்து அடுக்கடுக்காக பல்வேறு புகார்களை முன் வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.




ஆளுநர் ரவி குறித்து முதல்வர் வைத்துள்ள புகார்கள் குறித்த சாராம்சம்:


மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் உள்ளதாக இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இருப்பினும் பெயரளவில் மாநிலத்தின் தலைவரான ஆளுநர், தனது அதிகாரத்தை, மாநில முதல்வரை தலைவராகக் கொண்ட அமைச்சரவைக் குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரைப்படியே பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ஆளுநர் என்பவர் அரசியலமைப்பு கடமைகளைச் செய்பவராகவும், பாரபட்சமற்றவராகவும், அப்பழுக்கற்ற நேர்மையான நபராகவும் இருக்க வேண்டும். மக்களாட்சி தத்துவம் என்பது நமது அரசியல் சாசனத்தின் உயிர்நாடி. அந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நிறுவுவதற்காகவே நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் காலனிய சக்திகளை எதிர்த்துப் போராடி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.


இந்தியா ஒரு இறையாண்மை மிக்க சோசிலசி மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு நாடு. இந்த அடிப்படைக் கொள்கைகளில் ஏதேனும் ஒன்றில் நம்பிக்கை இல்லாத ஆளுநர் அரசியலமைப்பு பதவியை வகிக்கத் தகுதியற்றவர். அரசியல்வாதியாக மாறும் ஒரு ஆளுநர் அப்பதவியில் தொடரவே கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கை, செயல்பாடுகள், முடிவுகளுக்கு சவால் விடும் வகையில் ஆளுநர் அரசியல் களத்தில் இறங்க வேண்டும் என்பது அரசியல் சாசனத்தின் நோக்கமல்ல.  


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலஅரசின் கொள்கைகளுக்கு ஆளுநர் வெளிப்படையாக முரண்படுவது அல்லது  சட்டமன்றம் நிறைவேற்றும் சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவதில் தேவையற்ற காலதாதம் செய்து,முட்டுக்கட்டை போடுவது அல்லது கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மை போன்ற அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களுக்கு எதிராகச் செயல்படுவது போன்றதொரு சூழ்நிலையை அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.




இந்தக் கடிதத்தில் ஆளுநர் ரவிக்கு எதிராக முதல்வர் முன்வைத்துள்ள முக்கியப் புகார்கள் குறித்த விவரம்:


1. சட்ட முன்வடிவுகளுக்கு (மசோதாக்கள்) ஒப்புதல் அளிப்பதில்  தேவையற்ற காலதாமதம்.


2. குற்றவாளிகள் (முன்னாள் அமைச்சர்கள்) மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குவதில் தேவையற்ற தாமதம்.


3. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலஅரசின் அரசியல் மற்றும் கருத்தியல் எதிராளியாக செயல்ப��ுதல்.


4.  சட்டப்படி நிறுவப்பட்ட அரசிந் மீது அவமதிப்பு, வெறுப்பு, அதிருப்தி, தவறான எண்ணத்தை தூண்ட முயல்கிறார்.


5. நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை அடிக்கடி தனது பிளவுபடுத்தும் பேச்சுக்கள் மூலம் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகிறார்.


6. இந்தியா ஒற்றை மதத்தை சார்ந்துள்ளது என்ற கருத்தை வெளியிட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதித்து வருகிறார்.


7. சனாதன தர்மத்தை புகழ்வதும், தமிழ் இலக்கியத்தின் ரத்தினமான திருக்குறளை வகுப்புவாதப்படுத்துவது, திராவிடப் பாரம்பரியத்தையும் தமிழ்ப் பெருமையையும் கண்டிப்பது போன்ற வகுப்புவாதக் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.




8. காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில், தமிழ் மக்களையும் பண்பாட்டையும், இலக்கியத்தையும் திராவிடக் கருத்தியலையும் அரசியலையும் இழிவுபடுத்தும் வகையிலும், அவதூறாகவும் அறிக்கைகளை வெளியிட்டார்.


9. தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஏற்கவியலாத அதிர்ச்சியை அளிக்கும் கருத்தை தெரிவித்தார். ஆளுநரின் இந்த செயல் தமிழ்நாட்டின் மீது அவருக்குள்ள அதீத வெறுப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது.


10.  திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் அடையாளமாக திகழ்கிற பேரறிஞர் அண்ணா வைத்த தமிழ்நாடு என்ற பெயரை களங்கப்படுத்தும் வகையில் அமைந்தது ஆளுநரின் அந்தப் பேச்சு. இதன் மூலம் தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழர் பண்பாடு ஆகியவற்றின் மீது விவரிக்க முடியாத ஆழமாக வேரூண்றிய பகைமை கொண்டவர் என்பது தெளிவாகிறது.


11. குற்றவாளிகளை ஆதரிக்கும் வகையிலும், காவல்துறை விசாரணையில் தலையிடும் வகையிலும் ஆளுநர் செயல்படுகிறார். சிதம்பரம் நடராஜர் கோவிலைச் சேர்ந்த இரண்டு தீட்சிதர்கள் குழந்தைத் திருமணம் தொடர்பான புகார்களின் பேரில் ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஆளுநர் ஆர்.என். ரவி,சிதம்பரத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறவில்லை என்றும் பழிவாங்கும் நோக்கில் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது  மாநிலஅரசின் சமூக நலத்துறை 8 பொய்யான புகார்களைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறியிருந்தார். இது விசாரணையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், காவல்துறையினரின் நியாயமான விசாரணைக்கு இடையூறாக அமைந்தது.


12. சிறுமிகளின் திருமணம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி,ஆளுநர் ரவி கூறிய கருத்துக்கள் பொய்யானவை என்பது தெரியவந்தது. மேலும் இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், சில பெண் குழந்தைகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆளுநர் ரவி கூறியதும் தவறான கருத்துக்கள் என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைதத் திருமணம் என்ற கொடிய குற்றத்தைச் செய்தவர்களைக் காப்பாற்றும் நோக்கில் கருத்து தெரிவித்து வருவது நல்ல மனசாட்சி உள்ள யாராலும் அனுமதிக்க முடியாதது.




13. அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் வகையில், அவரை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக கூறி எனக்கு கடிதம் அனுப்பினார் ஆளுநர் ஆர். என். ரவி. அதன் பின்னர் முதல் ஆளுநர் அறிக்கையை நிறுத்தி வைக்கும்  மற்றொரு கடிதம் ஆளுநரிடமிருந்து எனக்குக் கிடைத்தது. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஆளுநர் பதவியை ஆர்.என். ரவி சிறுமைப்படுத்தி விட்டார்.


14. ஆளுநர் என்பவர் அரசியல் விருப்பு வெறுப்புகள், கட்சி அரசியல் அல்லது எதிர்கால நியமனங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அற்றவராகஇருக்க வேண்டும். எனது இந்தக் கருத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.  ஒரு நல்ல ஆளுநர் தன்னைப் பற்றிய உயர்வான கருத்தை அரசாங்கத்திற்குள்ளும், மக்கள்  மீதும்  திறமையான நிர்வாகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். ஏதோ ஒரு கட்சி அல்லது கருத்தியலின் நலனை வளர்ப்பதற்காக ஆளுநர் செயல்படக் கூடாது. அவர் மாநிலத்தின் நலனுக்காகதனது அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி அரசியலமைப்பு குறிக்கோள்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.


15. அரசியல் சாசனத்தையும், சட்டத்தையும் பாதுகாப்பதற்கும் தமிழ்நாட்டு மக்களின் சேவைக்கும் நல்வாழ்விற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதற்கும், 159வது பிரிவின் கீழ் எடுத்த உறுதிமொழியை ஆளுநர் ஆர்.என். ரவி மீறியுள்ளார் என்பது தெளிவாகிறது. மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்.  தான் ஒருதலைபட்சமானவர் மற்றும் ஆளுநர் பதவியை வகிக்கத் தகுதியர்றவர் என்பதை நிரூபித்துள்ளார். அவர் உயர் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு தகுதியானவர் என்று முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்