ஏர் இந்தியா ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டிருக்க வேண்டும்.. டாடா சன்ஸ் தலைவர் அதிருப்தி

Jan 08, 2023,02:02 PM IST
டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் முதிய வயது  பெண் பயணியிடம் மும்பையைச் சேர்ந்த நபர் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவத்தில், விமான ஊழியர்கள் இன்னும் சுதாரிப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் கூறியுள்ளார்.

நவம்பர் 26ம் தேதி நியூயார்க்கிலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த சங்கர் மிஸ்ரா என்ற நபர், தனது இருக்கைக்கு அருகில் பயணித்த 70 வயதான பெண்ணிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். அந்தப் பெண் மீது சிறுநீர் கழித்து பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் மிகுந்த தாமதமாக நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.




இந்த விவகாரம் குறித்து டாடா சன்ஸ் தலைவர்  சந்திரசேகரன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏர் இந்தியாவின் நடவடிக்கை துரிதமாக இருந்திருக்க வேண்டும். இன்னும் சுதாரிப்போடு செயல்பட்டிருக்க வேண்டும். நாம் சூழலைப் புரிந்து கொண்டு சுதாரிப்பாக செயல்படத் தவறி விட்டோம். இப்படி நடந்திருக்கக் கூடாது. பயணிகளின் பாதுகாப்புக்கு டாடா குழுமமும், ஏர் இந்தியாவும் பொறுப்பானவர்கள்.  அதை மனதில்கொண்டு ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து  நிறுவனம் தீர ஆராயும். தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று சந்திரசேகரன் கூறியுள்ளார்.

அதிகம் பார்க்கும் செய்திகள்