South West Monsoon: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: சென்னையில் சட்டென மாறிய வானிலை

May 23, 2026,01:29 PM IST

சென்னை: இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் நிலவி வரும் சாதகமான வளிமண்டலச் சூழல் காரணமாக, இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வழக்கமாக ஜூன் மாதத் தொடக்கத்தில் இந்தியப் பகுதிகளில் துவங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த முறை சற்று முன்கூட்டியே தீவிரமடைந்து, பல்வேறு கடல்சார் பகுதிகளில் வேகமாக முன்னேறி வருகிறது.


வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, தென்மேற்கு பருவமழையானது பின்வரும் பகுதிகளில் தீவிரமாக முன்னேறியுள்ளது: அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல்: தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள் மற்றும் குமரிக்கடல் உள்ளிட்ட மேலும் சில முக்கிய கடல் பகுதிகளில் பருவமழை வெற்றிகரமாக முன்னேறியுள்ளது.


வங்காள விரிகுடா: தெற்கு வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதி வரை பருவமழை பரவியுள்ளது.


அந்தமான் நிக்கோபார் தீவுகள்: அந்தமான் கடல் பகுதிகள் முழுவதிலும் தென்மேற்கு பருவமழை முழுமையாகக் கால்பதித்து, அப்பகுதிகளில் பரவலான மழையை தந்து வருகிறது.




வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு :


தற்போது தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் பலத்த காற்று மற்றும் மேகமூட்டம் காரணமாக, பருவமழை அடுத்த சில நாட்களுக்குள் இந்திய நிலப்பரப்பை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்த வளிமண்டல சுழற்சி காரணமாக, கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வரும் நாட்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் மற்றும் தீவிரத்துடன் தொடங்கி இருப்பது, இந்தியாவின் ஒட்டுமொத்த விவசாயத் துறைக்கும், நீர் மேலாண்மைக்கும் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. தென் மாநிலங்களில் கோடைக்கால வெப்பத்தின் தாக்கம் குறைந்து, இதமான சூழல் நிலவத் தொடங்கியுள்ளது.


சென்னையில் மாறிய வானிலை :


தலைநகர் சென்னையில் கடந்த ஒரு வாரமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இரவு நேரங்களிலும் வெப்பம் குறையாமல், அனல் காற்று வீசத் துவங்கியது. இதனால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னையில் குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது. காற்றின் வேகம் அதிகரித்திரிப்பதுடன், மேகமூட்டமாக காணப்படுகிறது.


இன்று காலை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது. புழுதியுடன் கூடிய இந்த காற்றால் மக்கள் பெரும் குழப்பமடைந்தனர். மெரீனா கடற்கரைக்கு வந்திருந்த மக்களை காவல்துறையினர், புழுதிக் காற்று பலமாக வீசுவதால் கடற்கரையிலிருந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்