டெல்லி: 100 ஆண்டுகளில் இல்லாத பேரிடரை தமிழ்நாடு சந்தித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு அவசர வெள்ள நிவாரண நிதியாக ரூ. 2000 கோடியை விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் கோரிக்கை வைத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை, இன்று இரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் முதலில் வட மாவட்டங்களிலும், தற்போது தென் கோடி மாவட்டங்களிலும் பெய்த கன மழை மற்றும் பெரு வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கினார்.
மேலும் தமிழ்நாட்டுக்கு விரைந்து வெள்ள நிவாரண உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக பின்னர் தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்ய கோரியும் தென்மாவட்டங்களில் தற்போது பெய்த அதிக கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும் எடுத்துரைத்து அப்பாதிப்புகளை சீரமைத்திட தேவையான நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு கோரிக்கை மனுவினை பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்தார்.

புயல் கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறித்தும் புயல் மழையால் சாலைகள் பாலங்கள் பள்ளி கட்டிடங்கள் அரசு மருத்துவமனைகள் போன்ற பொதுக் கட்டமைப்புகளும் மின்சார உட்கட்டமைப்புகளும் உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் கட்டமைப்புகள் கிராம சாலைகள் போன்றவைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் தமிழ்நாடு அரசு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதால் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மிக விரைவாக இயல்பு நிலை திரும்பியது குறித்தும் முதலமைச்சர் பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார்.
மேலும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 7. 12. 2003 அன்று சென்னைக்கு வருகை தந்து மிக்ஜாம் புயல் பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது குறித்தும் மத்திய அரசின் பல்துறை ஆய்வுக்குழு 12.12.2023 மற்றும் 13.12.2023 ஆகிய நாட்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து குழு தன்னுடன் ஆலோசனை மேற்கொண்டது குறித்தும் எடுத்துரைத்ததுடன் தமிழ்நாடு அரசு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொண்டதற்கு அக்குழு பாராட்டு தெரிவித்ததையும் குறிப்பிட்டு சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத் தொகையாக 7033 கோடியும், நிரந்தர நிவாரண தொகையாக 12,659 கோடி ரூபாயும் கோரப்பட்டதை தெரிவித்து நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்யுமாறு பிரதமரிடம் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழை முதல் அதிக கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கி அம்மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பையும் தென் மாவட்டங்களில் தற்போது வரலாறு காணாத வகையில் நூறு ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
எனவே பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2000 கோடி அவசர நிவாரண நிதியாக வாழ்வாதார உதவிக்காகவும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காகவும் வழங்கிட வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}