தேதிமுகவை அழைக்கும் காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் இணைந்தால் பலன் உண்டா.. முதல்ல இடம் இருக்கா?

Jun 03, 2025,11:31 PM IST

சென்னை : தமிழகத்தில் உள்ள இந்தியா கூட்டணியில் இணைய வருமாறு, அதாவது திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய வருமாறு தேமுதிக.,விற்கு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார். 


இந்த அழைப்பை தேமுதிக ஏற்குமா? அப்படியே ஏற்று திமுக கூட்டணியில் இணைந்தால் அது எந்த அளவிற்கு தேமுதிக.,வின் வளர்ச்சி பலன் தரும்?.. அதை விட முக்கியமாக, திமுக கூட்டணியில் முதலில் தேமுதிகவுக்கு இடம் இருக்கா.. வாங்க பார்க்கலாம்.


தேமுதிக தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் இருந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் தேமுதிக.,விற்கு வருகிற ராஜ்யசபா எம்.பி., சீட் தர முடியாது என அதிமுக தலைமை மறுத்து விட்டதால், அதிமுக தலைமை மற்றும் கூட்டணி மீது தேமுதிக கடுமையான அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.


இந்த நிலையில் அடுத்தடுத்து கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் திமுகவைப் புகழ்ந்து பேச ஆரம்பித்திருக்கிறார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது குறித்து சிலாகித்து நன்றி கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து இன்று (ஜூன் 03) முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரை புகழ்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 




பிரேமலதாவின் அறிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே, திமுக கூட்டணியில் இணைய வருமாறு தேமுதிக.,விற்கு செல்வ பெருந்தகை அழைப்பு விடுத்தார். செல்வ பெருந்தகையின் இந்த அழைப்பு நிச்சயம் திமுக.,வின் அழைப்பாகவே பார்க்கப்படுகிறது. திமுக தலைமையின் அனுமதி இல்லாமல் நிச்சயமாக செல்வ பெருந்தகை தன்னிச்சையாக இப்படி ஒரு அழைப்பை விடுத்திருக்க வாய்ப்பு இல்லை. இதனால் தேமுதிக.,வின் கூட்டணியை திமுக.,வும் மறைமுகமாக விரும்புகிறது என்றே எடுத்துக் கொள்ளலாம்.


2026ம் ஆண்டில் நடக்க இருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் எப்படியும் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்றும், திமுக.,வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிமுக-பாஜக கூட்டணி தீவிரமாக களமிறங்கி உள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம், நீட் தேர்வு விவகாரம், டாஸ்மாக் ரெய்டு உள்ளிட்ட பல விவகாரங்களில் திமுக.,விற்கு கொஞ்சம் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன. மற்றொரு புறம் திமுக.,வுக்கு எதிராக அதிமுக-பாஜக மட்டுமின்றி சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் களத்தில் இறங்கி தீவிரமாக வேலை செய்து வருகின்றன. 


எல்லாவற்றையும் விட விஜய்யின் வருகைதான் திமுகவை பதற வைத்து வருகிறது. விஜய்க்கு கூடும் கூட்டம் திமுக வட்டாரத்தை உண்மையிலேயே அச்சுறுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. விஜய் இன்னும் கூட்டணியை ஏற்படுத்தவில்லை. அதிமுகவுடன் விஜய் தரப்பு பேசியிருந்தது. ஆனால் இதுவரை கூட்டணி அமையவில்லை. விஜய்க்கென்று மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதாலும், விஜய்க்கு சாதகமான மன நிலை இளைஞர்கள் மத்தியில் நிலவுவதாலும் தனக்கான வெற்றி வாய்ப்புகள் எந்த வகையிலும் சிதைந்து போய் விடக் கூடாது என்று கவனம் காட்டுகிறது திமுக.


இதன் ஒரு பகுதியாகவே இதுநாள் வரை பார்க்காமல் இருந்து வந்த தனது அண்ணன் மு.க.அழகிரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் போய்ச் சந்தித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் தென் மாவட்டங்களில் உள்ள பலவீனத்தை சரிப்படுத்தி விடலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கருதுவதாக கூறப்படுகிறது. அதேபோல விஜய் பக்கம் போகும் வாய்ப்புள்ள தேமுதிகவையும் தன் பக்கம் திருப்ப திமுக முயல்வதாக கூறப்படுகிறது. 




ஆனால் இந்த சமயத்தில் திமுக., கூட்டணியில் தேமுதிக இணைவது சரியான முடிவாக இருக்கும் என்பது சந்தேகத்திற்குரிய கேள்வி தான். தற்போதுள்ள அரசியல் கள நிலவரம் ஒரு புறம் இருந்தாலும் தேதிமுக தலைவர் விஜயகாந்த் தான் உயிருடன் இருந்தது வரை எந்த காரணத்திற்காகவும் திமுக., கூட்டணியில் இணைவது இல்லை என்பதில் உறுதியாக இருந்தார். திமுக ஆட்சி காலத்தில் மேம்பால பணிகளுக்காக தன்னுடைய திருமண மண்டபத்தை இடித்தது முதலே தனிப்பட்ட முறையில் திமுக., மீது விஜயகாந்த் கடுமையான கோபத்தில் இருந்தது அனைவரும் அறிந்ததே. கருணாநிதி எவ்வளவோ முயற்சித்தும் கூட திமுக., கூட்டணியில் இணைய கூடாது என்பதில் விஜயகாந்த் மிக உறுதியாக இருந்தார்.


தற்போது விஜயகாந்த் இல்லாத நிலையில் பிரேமலதா, திமுக கூட்டணியில் இணையும் முடிவை எடுத்தால் அது கண்டிப்பாக கட்சி தொண்டர்களிடமும், விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியிலும் தேமுதிக., மீது அதிருப்தியை உருவாக்கும். மற்றொரு புறம் திமுக எதிர்ப்பும் தேமுதிக.,வின் பக்கம் திரும்பும். அப்படி நடந்தால் அது தேமுதிக.,வின் செல்வாக்கையும், ஓட்டு வங்கியையும் மேலும் பலம் இழக்க வைக்கும் என்று கருதப்படுகிறது. அதேசமயம், தேமுதிக கூட்டணிக்குள் வந்தால் அந்தக் கட்சிக்கு எத்தனை சீட் கிடைக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வியாகும்.


திமுக கூட்டணியில் ஏற்கனவே ஹவுஸ்புல்லாக உள்ளது. இருக்கிற கட்சிகளுக்குமே இடத்தைப் பகிர்வதில் பல சிக்கல்கள் உள்ளன. இதில் தேமுதிகவும் வந்தால் நிச்சயம் எந்தக் கட்சியின் தலையிலாவது கை வைத்தால்தான் உண்டு. அந்த வகையில் தேமுதிக வந்தால் திமுகவுக்கு சிக்கல்தான். அதேசமயம், எதிர்ப்பு வாக்குகளைக் குறைக்க அது உதவும் என்றால் நிச்சயம் தேமுதிகவை தன் பக்கம் திமுக ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

துயரத்தில் முடிந்த RCB ரசிகர்களின் கொண்டாட்டம்.. பெங்களூரில் பரபரப்பு.. நெரிசலில் 11 பேர் பலி

news

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி: நடிகர் கமல்ஹாசன் உருக்கம்

news

உப்புமாவிற்கு பதிலாக பிரியாணி...3 வயது சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய கேரள அரசு!

news

Thuglife: தக் லைஃப் திரைப்படம்...9 மணி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

news

அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான அறிவிப்பு..திரும்பப் பெறுக..குடியரசுத் தலைவருக்கு சுவெங்கடேசன் கடிதம்

news

வானமே இடிந்து தலையில் விழுந்தாலும் டென்ஷன் ஆகாமல் கூலாக இருக்கும் 7 ராசிக்காரர்கள்

news

என்னது.. ஐபிஎல் 2025 பைனலில் அனுஷ்கா அணிந்து வந்த ஜீன்ஸ் விலை ரூ.27,000 ஆ?

news

வட்டச்செயலாளருடன் பேசுவது ஒரு தவறா?. அண்ணாமலை கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

news

Rain rain come again.. மே மாதத்தில் இந்தியாவில் மழை அளவு 125 சதவீதம் அதிகரிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்