பிரதமர் மோடியின் உரை.. செங்கோட்டை விழாவுக்கு வராத மல்லிகார்ஜூன கார்கே!

Aug 15, 2023,09:54 AM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் ஆற்றிய சுதந்திர தின உரையை ராய்ஜசபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே புறக்கணித்து விட்டார். இதனால் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை காலியாக கிடந்தது.

77வது சுதந்திர தினத்தையொட்டி இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த கூட்டத்தில் பிரதமர் உரை இடம் பெற்றது.



இந்த விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் வரவில்லை. அதற்குப் பதில் அவர் ஒரு வீடியோ செய்தியை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தார். அதில் முந்தைய பிரதமர்கள் ஆற்றிய பங்களிப்பு குறித்து விவரித்திருந்தார்.

மல்லிகார்ஜூன கார்கேவுக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் விழாவுக்கு வரவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் காரணம் சொல்லப்பட்டது.

மல்லிகார்ஜூன கார்கே விடுத்திருந்த வீடியோ செய்தியில், சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், நேதாஜி  சுபாஷ்சந்திர போஸ், மெளலானா  அபுல் கலாம் ஆசாத், ராஜேந்திர பிரசாத், பி.ஆர்.அம்பேத்கர் உள்ளிட்டோர் ஆற்றிய பங்களிப்பை விவரித்திருந்தார்.



மேலும் இந்தியாவின் பிரதமரான ஜவஹர்லால் நேரு தொடங்கி இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, ராஜீவ் காந்தி, பி.வி. நரசிம்ம ராவ், மன்மோகன் ஆகியோர் ஆற்றிய பங்களிப்புகளையும் அவர் விளக்கியிருந்தார். அதை விட முக்கியமாக வாஜ்பாய் ஆற்றிய சேவையையும் அவர் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

"ஒவ்வொரு பிரதமரும் நாட்டின் வளர்ச்சிக்காக பங்காற்றியுள்ளனர். ஆனால் இன்று சிலர், கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி அடைந்து விட்டதாக கூறி வருகின்றனர். அடல் பிகாரி வாஜ்பாய் உள்பட அனைத்துப் பிரதமர்களுமே நாட்டின் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே நினைத்தனர்.  பல வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால் இன்று ஜனநாயகம், அரசியல்சாசனம், சுயேச்சையான அமைப்புகள் அனைத்துமே மிகப் பெரிய மிரட்டலுக்குள்ளாகியுள்ளன.

எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்க அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ரெய்டுகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் ஆணையம் பலவீனப்படுத்தப்பட்டு விட்டது. எதிர்க்கட்சி எம்.பிக்கள் நசுக்கப்படுகிறார்கள், சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள், அவர்களது மைக்குகள் மெளனிக்கப்படுகின்றன. பேச்சுக்கள் நீக்கப்படுகின்றன.

சுதந்திர இந்தியாவில் மறைந்த ஜவஹர்லால் நேரு காலத்தில் ஐஐடிக்கள், ஐஐஎம்கள், எய்ம்ஸ் மருத்துவமனைகள், விண்வெளி ஆய்வு மையம் என பல உருவாக்கப்பட்டன.  கலை, கலாச்சாரம், இலக்கியம் வளர்ச்சி பெற்றது.

லால் பகதூர் சாஸ்திரியும், இந்திரா காந்தியும், இந்தியா தன்னிறைவு அடைவதில் கவனம் செலுத்தினர், மிகப் பெரிய பங்காற்றினர்.  அவர்கள் கொண்டு வந்த கொள்கைகள்தான் இந்தியா இன்று பல துறைகளில் தன்னிறைவு பெற முக்கியக் காரணம்.

மாபெரும் தலைவர்கள் வரலாறுகளை அழிக்க மாட்டார்கள், மாறாக வரலாறு படைப்பார்கள். ஆனால் இன்று பல தலைவர்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன, கடந்த கால திட்டங்கள் பெயர் மாற்றப்படுகின்றன, அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களை மாற்றுகிறார்கள். சர்வாதிகார அடக்குமுறைகளால் ஜனநாயகத்தை முறித்துப் போட்டுக் கொண்டுள்ளனர்.  பழைய சட்டங்களை பெயர் மாற்றுகிறார்கள்.  முதலில் அச்சே தின் என்றார்கள்.. பிறகு புதிய இந்தியா என்றார்கள்.. இப்போது "அம்ருத் கால்" என்கிறார்கள்.. தங்களது தோல்வியை மறைக்க இந்தப் பெயர் மாற்றமா? என்று கார்கே கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்