எரிந்த கடிதத்தின் வாசனை!

May 18, 2026,10:59 AM IST

- டிலாணி ஸ்ரீதரன்


ஒரு செவிலித் தாயின் மனக் குமுறல்


ஏழ்மையின் பிடியிலும் எடுத்து வளர்த்தப் பிள்ளை 

என் வாழ்வின் அர்த்தமாகவே மாறிய முல்லை

நீயும்  கிடைத்தாயென மகிழ்ச்சிக்கு அளவே இல்லை 


மழலை உன் சிரிப்பே தந்தது தித்திக்கும் விடியலை

உன்னை ஆளாக்க ஒரு நொடியும் நான் ஓயவேயில்லை

மடியிலே கட்டினேன் மஞ்சமாக உனக்குத் தொட்டிலை


மரகதம் உன்னையும் சுமந்தேன் மடி கனக்கவில்லை

நீ சிறக்க  என் உழைப்பை அர்ப்பணிக்க மறக்கவில்லை

சுவாசமாய் நீயிருந்ததால் எந்தத் துன்பமும் எனக்கில்லை


குறைகள் களைய அனுதினமும் வேண்டினேன் கடவுளை

கொடிய நோய் என்னை துரத்தியபோதும் நான் கலங்கியதில்லை

எனக்காக இதுவரை யாரிடமும் எதுவும் கேட்டதில்லை




கணவனை விட்டுப் பிரிந்தும் மனம் வருந்தவில்லை

என்னுலகம் உன்னுள் அடங்கியதால் மகிழ்வுக்கும் பஞ்சமில்லை

வைத்தியராய் உன்னைப் பார்க்க துறந்தேன் என் ஆசைகளை


பைத்தியமாய் நானுமே கடந்தேன் பல இரவு பகலை

கனவு நனவாகிய போது ஆனந்தத்தில் திளைத்தாளிந்த அபலை

எப்போது கட்டியணைப்பாயென எதிர் பார்த்திருந்தேன் தருணங்களை


என்ன ஆச்சரியம் நீயும் கண்டு கொள்ளவில்லை

மனதிற்குள் புழுங்கினேன் குமுறலும் நிற்கவில்லை

இருந்தும் நீ தங்கியிருந்த இதயம் ஏனோ வெடிக்கவில்லை


அலட்சியம் செய்து அயல்நாடு சென்றாய் வரவில்லை

அம்மாவென  எப்போது கூப்பிட்டாய் எனக்கும் நினைவில்லை

உனக்கு என்னை பிடிக்கவில்லை அதனால் தரவில்லை தொல்லை


இனியென்னைப் பார்க்க வந்தும் எந்தப் பயனுமில்லை

நானும் ஏற்றுக்  கொண்டேன் மரணத்தின் அஞ்சலை

மீண்டுமொரு பிறவியிருந்தாலும் மகனாகத் தாங்க வேண்டும் உன்னை


கடிதமாய் எழுதினேன் மனதை உலுக்கும் உள்ளத்தின் கசப்புகளை

உருகி உருகி எழுதினாலும் உடனே பதில் வரப்போவதுமில்லை

மீட்டினேன் உயிருக்குள் உயிரான காவியத்தின் ஒளிந்த பக்கங்களை


குணத்தில் குறைகள் சொல்லவில்லை குத்திக் காட்டவுமில்லை

எழுதி எழுதித் தீர்த்தேன் என் எண்ணத்தின் நினைவலைகளை

என்ன செய்வேன் யாரிடமும் சொல்லி ஆறுதல் தேடமுடியாத நிலை


தீயிலிட்டாலும் கருவை சுமக்காத  கருவறை எரியுமென்ற நம்பிக்கையில்லை

வாசனை இல்லையெனத் தள்ளிய தாய்மையின் புனிதத்தை

தீக்குளித்து எரிந்த பாதி கடிதத்தில் வாசமாக உணர்வாய் உண்மை


உணரும்போது இந்த உலகத்தில் நானும் இல்லை

உண்மையான தாயன்பிற்கு மண்ணில் ஏதும் நிகரில்லை

உணர்ந்தவர் எல்லாம் கூறுவார் தாயில்லாமல் நானில்லை


தாய்மையின் பெருமையை வரிகளில் விமர்சிக்கத் தேவையில்லை

இதனை உணராதவர் இப்பூமியில் மனிதரே இல்லை

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்