தமிழக மீனவர்கள் 17 பேர் கைது : சிங்கள தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட ராமதாஸ் கோரிக்கை

Sep 14, 2023,03:27 PM IST
சென்னை: 17 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தொடரும் இந்த அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேர்,  புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதி மீனவர்கள் 5 பேர், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 4 பேர்  என மொத்தம் 17 மீனவர்களை  இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், சிங்களக் கடற்படை  அத்துமீறி நுழைந்து  கைது செய்திருக்கிறது. சிங்களப் படையினரின்  தொடர் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.



தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எப்போதெல்லாம் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு வாழ்வாதாரம்  பறிக்கப்படுவதும்  தொடர்கதையாக மாறி வருகிறது. சிங்களப் படையினரின் தொடர் அத்துமீறல்கள் காரணமாக தமிழகத்தில் ஏராளமான மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றன.

தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதால் தான் அவர்கள்  கைது செய்யப்படுவதாக இலங்கை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடுக்கவே இலங்கை அரசு திட்டமிட்டு செயல்படுவதாக தோன்றுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர்  தொடர்ந்து கைது செய்து வந்தனர். கடந்த ஒரு மாதமாக கைது நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. 

ஆனால்,  கடந்த ஒரு மாதத்தில் தமிழக மீனவர்கள் மீது மூன்று முறை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடற்கொள்ளையர்களின் தாக்குதல் இப்போது குறைந்துள்ள நிலையில், கைது நடவடிக்கை மீண்டும் தொடங்கியுள்ளது. எனவே, இவை இரண்டுமே  தமிழக மீனவர்களை அச்சுறுத்துவதற்காக இலங்கை அரசு திட்டமிட்டு செய்யும் செயலாகவே தெரிகிறது.

தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால்  தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், கடற்கொள்ளையர்களால் கொள்ளைகளுக்கு ஆளாக்கப்படுவதும் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும். இதை  மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இலங்கை அரசை கடுமையாக எச்சரிப்பதன் மூலமாகவோ, அல்லது இரு தரப்பு பேச்சுகளின் மூலமாகவோ வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் அமைதியாகவும்,  பாதுகாப்பாகவும் மீன் பிடிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இப்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்