விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?

May 06, 2026,02:25 PM IST

- அ.சீ.லாவண்யா


சென்னை: “கூட்டம் ஒட்டா மாறாது”, “ஒட்டு சீட்டா மாறாது” என்ற பழைய அரசியல் கருத்துகள் அனைத்தையும் முறியடித்து, நடிகர் விஜயின் அரசியல் பயணம் புதிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது.


நீண்ட காலமாக நிலவி வந்த “திமுக, அதிமுகவுக்கு எதிராக மக்களின் மனதை மாற்ற முடியாது” என்ற நம்பிக்கைக்கு முற்றிலும் நேர் மாறாக, சமீபத்திய தேர்தல் முடிவுகள் வித்தியாசமான செய்தியை அளித்துள்ளன. கூட்டமும் மாறியுள்ளது, வாக்கு போக்கும் மாறியுள்ளது என்பதையே மக்கள் தீர்மானம் வெளிப்படுத்துகிறது.


“நடிகன் நாடாள முடியாது” என்ற விமர்சனங்களும் இப்போது சவாலுக்குள்ளாகியுள்ளன. அரசியல் மேடையில் விஜயின் செயல்பாடுகள், அவரது தலைமையின் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் உருவாக்கி வருவதாக பார்க்கப்படுகிறது.


“அவர் திரும்ப நடிக்கப் போய்விடுவார்” என்ற சந்தேகங்களுக்கும் தற்போது இடமில்லை என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர். முழுமையான அரசியல் ஈடுபாட்டுடன் அவர் முன்னேறி வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

அதேபோல், “அவருக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்?” என்ற கேள்விகளும் தற்போது பதில் பெறத் தொடங்கியுள்ளன. அவரது அணுகுமுறை, பொதுமக்களுடன் கொண்ட உறவு மற்றும் புதிய யோசனைகள் ஆகியவை அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்படுகின்றன.




“விஜய் இவராக முடியாது... விஜய் அவராக முடியாது” என்ற ஒப்பீடுகள் எல்லாவற்றையும் தாண்டி, “எவராலும் விஜய் ஆக முடியாது” என்ற உணர்வை உருவாக்கும் வகையில் அவரது பயணம் நகர்கிறது—மாற்றம் சாத்தியம் என்பதை மீண்டும் நிரூபித்த ஒரு அரசியல் கதையாக இது மாறியுள்ளது.


உண்மையில் விஜய்யின் வருகையை, அவரது பலத்தை திராவிடக் கட்சிகள் தப்பாக கணக்குப் போட்டு விட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். திராவிடக் கட்சிகள் மீதான நீண்ட கால மக்கள் அதிருப்தி ஒரு பக்கம், திரும்பத் திரும்ப மாறி மாறி இரு கட்சிகள் மட்டுமே ஆட்சிக்கு வருவதால் மக்களிடையே ஏற்பட்ட சலிப்பு உள்ளிட்ட காரணங்கள்தான் விஜய்க்குக் கிடைத்த ஆதரவாக பார்க்கப்படுகிறது.


மேலும் தற்போதைய கட்சிகள் இளம் தலைமுறையினரிடையே செல்வாக்கை இழந்து வருவதையும் இது உறுதிப்படுத்துவதாக உள்ளது. இப்படிப் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.


விஜய் மீது மக்கள் 200 சதவீத நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. 


இந்த தேர்தலில் இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்களிப்பவர்கள் அதிக அளவில் விஜய்க்கு ஆதரவு அளித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது பிரச்சார முறையும், மக்களுடன் கொண்ட நெருக்கமும் இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.


பெரம்பூரில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கிலும் அதே வேகத்தில் வெற்றி பெற்றது த.வெ.க கட்சியின் வளர்ச்சியை, விஜய்யின் செல்வாக்கை வெளிப்படுத்துகிறது. இது கட்சியின் அடிப்படை வலிமையை மேலும் உறுதிப்படுத்துகிறது.


விஜய் தனது வெற்றியை மக்களுக்கே அர்ப்பணிப்பதாக கூறி, “இந்த வெற்றி எனது அல்ல, மக்கள் நம்பிக்கையின் வெற்றி” என கூறியுள்ளார். மேலும், தொகுதி முன்னேற்றத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.


அரசியல் விமர்சகர்கள், விஜயின் தொடர்ச்சியான வெற்றிகள் தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என மதிப்பிடுகின்றனர். இது எதிர்கால தேர்தல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி அறிவிக்கப்பட்டவுடன், திருச்சி நகரம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பட்டாசு வெடிப்பும், ஊர்வலங்களும் நகரை கொண்டாட்ட மையமாக மாற்றின.


பெரம்பூரில் தொடங்கிய வெற்றிப் பயணம், திருச்சி கிழக்கிலும் வெற்றிக் குரல் எழுப்பிய நிலையில், “இது தொடக்கம் மட்டுமே” என்ற எதிரொலி அரசியல் வட்டாரங்களில் ஒலிக்கிறது.


(அ. சீ. லாவண்யா, வளரும் இளம் எழுத்தாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்