கனவுகள் மெய்ப்படும்!

Apr 11, 2026,12:37 PM IST

- தமிழ்மாமணி  இரா.  கலைச்செல்வி   


சிவகங்கை சீமையின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்திருந்தான் கதிர். அவனது கையில் இருந்ததோ ஒரு பழைய மடிக்கணினி மட்டுமே. மனதில் இருந்ததோ 'செயற்கை நுண்ணறிவு' மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்கிற மிகப்பெரிய கனவு.


சென்னையின் அடுக்குமாடி அலுவலகங்கள் அவனுக்குப் புதிது. பல நிறுவனங்களில் ஏறி இறங்கினான். 


"உன் ஐடியா நல்லா இருக்கு, ஆனா இதெல்லாம் கிராமத்துல வேலை செய்யுமா? பேசாம ஏதாவது ஐடி கம்பெனியில வேலைக்குப் போ" என்ற ஏளனப் பேச்சுகளே அவனுக்குப் பதிலாகக் கிடைத்தன.


ஒரு மாலை நேரத்தில், மெரினா கடற்கரை மணலில்  விரக்தியுடன் அமர்ந்திருந்தான்.  


சுண்டல் விற்கும் பையன், அண்ணா... அண்ணா .…சுண்டல் வாங்கிக்கோங்க அண்ணா என்று கெஞ்சினான். மனம் தாங்காமல்,  கதிர் பத்து ரூபாய்க்கு சுண்டல் வாங்கினான். சுண்டலை சாப்பிட்டு முடித்து ‌ ,அந்தப் பேப்பரை தூக்கி எரியும் முன், பிரித்துப் பார்த்தான்.  அதில் மகாகவி பாரதியாரின் வரிகள் அவன் கண்ணில் பட்டன:


"எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்;

திண்ணிய நெஞ்சங் வேண்டும், தெளிந்த நல்லறிவு வேண்டும்."




அந்த வரிகள் அவனுக்குள் ஒரு புதிய உத்வேகத்தைத் தந்தன. "நமது கனவை உலகம் நம்ப வேண்டும் என்றால், முதலில் அதைச் செயல்படுத்தி நிரூபிக்க வேண்டும்" என்று முடிவு செய்தான்.


மறுநாளே தனது கிராமத்திற்குத் திரும்பினான். தன் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டான். மண்ணின் ஈரப்பதம், பூச்சிகளின் வருகை, நீர்ப்பாசனத் தேவை ஆகியவற்றைத் துல்லியமாகக் கணக்கிடும் ஒரு செயலியை உருவாக்கினான். இரவு பகலாக உழைத்தான். சில நேரங்களில் தோல்விகள் வந்தன; மின்சாரம் இருக்காது, இணையம் கிடைக்காது. ஆனால், அவன் தளரவில்லை.


ஒரு வருடம் கழிந்தது. கதிரின் முயற்சியால் அந்த கிராமத்து விவசாயிகளின் விளைச்சல் 40% அதிகரித்தது. செய்தி ஊடகங்கள் இதை வெளிச்சம் போட்டுக் காட்டின. அன்று அவனை நிராகரித்த அதே நிறுவனங்கள், இன்று அவனது தொழில்நுட்பத்தை வாங்க வரிசையில் நின்றன.


பெரிய ஆளுமைகள்  நிறைந்த ஒரு மேடையில் "சிறந்த இளம் கண்டுபிடிப்பாளர்" விருதைப் பெற்றுக்கொண்டு கதிர் பேசினான்: "நண்பர்களே, கனவு காண்பது என்பது தூக்கத்தில் வருவதல்ல; உங்களைத் தூங்க விடாமல் செய்வது. உங்கள் இலட்சியத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், இந்த உலகமே ஒருநாள் உங்கள் பின்னால் வரும்.


தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றுங்கள். விடாமுயற்சி இருந்தால் நிச்சயம் உங்கள் கனவுகள் மெய்ப்படும்.


கூட்டத்தில் பலத்த கரகோஷம்.


(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது ‌ போன்ற 15 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்