புயல் வந்தப்பவே சுதாரிச்சிருக்கணும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மீது எடப்பாடி பழனிச்சாமி பாய்ச்சல்

Dec 27, 2023,03:47 PM IST
சென்னை:  சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் சென்னை பெட்ரோ கெமிக்கல்  நிறுவனத்தில் இருந்த கச்சா எண்ணெய் மழை வெள்ளத்திலும் கடலிலும் கலந்து மீனவ மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய நிகழ்வில், மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் தங்களது பணிகளைச் செவ்வனே செய்திருந்தால் இப்போது ஏற்பட்டது போன்ற நிகழ்வு ஏற்பட்டிருக்காது என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

வட சென்னையில் உள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலை நிறுவனத்திலிருந்து அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு பலரும் நேற்று நள்ளிரவில் பாதிக்கப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது அந்த தொழிற்சாலையை தற்காலமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:




வட சென்னை, எண்ணூரில் அமைந்துள்ள கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் உரம் தயாரிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய அமோனியத்தை நேரடியாகக் கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லும் அமோனியம் குழாய் 26.12.2023 அன்று நள்ளிரவில் வெடித்துச் சிதறியதாகவும், அமோனியம் காற்றில் கலந்து பரவத் தொடங்கியது.

இதன் காரணமாக தொழிற்சாலைக்கு அருகே உள்ள மீனவ கிராமங்களான பெரிய குப்பம், சின்ன குப்பம், உலகநாதபுரம், சத்தியவாணி மூர்த்தி நகர், தாழங்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றில் பரவிய அம்மோனியாவை சுவாசித்தபோது அப்பகுதியில் வாழ்ந்து வந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மீனவ மக்கள் உயிருக்கு பயந்து தங்களது உடைமைகளைக்கூட எடுத்துச் செல்லாமல், அவர்களுக்கு தங்கும் வசதி கூட செய்யப்படாத நிலையில், குளிரில் ஆங்காங்கே தங்கள் குழந்தைகளுடன் நேற்று இரவு  தஞ்சம் அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மூச்சுத் திணறலாலும் மயக்கத்தினாலும்  40க்கும் மேற்பட்ட மக்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட காலத்தில்  சென்னை பெட்ரோ கெமிக்கல் 
நிறுவனத்தில் இருந்த கச்சா எண்ணெய் மழை வெள்ளத்திலும் கடலிலும் கலந்து மீனவ மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய நிகழ்வில், மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் தங்களது பணிகளைச் செவ்வனே செய்திருந்தால் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டிருக்காது என்றும், மீனவ மக்கள் பாதிப்படைந்திருக்க மாட்டார்கள் என்றும் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். 

இனியாவது மாசு கட்டுபாட்டு அதிகாரிகள் தங்களது பணிகளை துரிதமாகவும் பொறுப்புடனும் செய்திட வலியுறுத்தியிருந்தேன். 

எனது ஆலோசனையின்படி, திமுக அரசு செயல்பட்டு, உடனடியாக மாசு கட்டுபாட்டு அதிகாரிகளை வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய அனுப்பியிருந்தால், நேற்று நள்ளிரவு கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் நடைபெற்ற அம்மோனியம் வாயு கசிவு விபத்து நடைபெற்றிருக்காது. ஆனால், எப்போதும்போல் திமுக அரசு எங்களது ஆரோக்கியமான ஆலோசனைகளை காது கொடுத்து கேட்காதது போல், மேலே குறிப்பிட்ட எனது ஆலோசனையையும் காற்றிலே பறக்கவிட்டது.

ஏறத்தாழ இதுபோன்றே 40 ஆண்டுகளுக்கு முன் போபால் பூச்சிக்கொல்லி -உரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயு விபத்து போன்றதுதான் இதுவும். கடவுள் அருளால் நேற்று நள்ளிரவு விஷ வாயு வெளியேறிய ஏற்பட்ட விபத்தில், உயிர்பலிகள் இல்லாமல் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இனியாவது திமுக அரசும், மாசு கட்டுபாட்டு வாரியமும் கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து மக்கள் நலப்பணிகளில் தீவிரப் பணியாற்ற வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்