ஈரோடு கிழக்கில் களம் காணும் ஆசிரியை சீதாலட்சுமி.. வேட்பாளரை அறிவித்தார் சீமான்.. 2வது முறையாக போட்டி

Jan 14, 2025,10:43 AM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஆசிரியை சீதாலட்சுமியை வேட்பாளராக அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.


ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் முக்கியக் கட்சியாக இதுவரை திமுக மட்டுமே தனது வேட்பாளரை (வி.சி.சந்திரகுமார்) அறிவித்துள்ளது. அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட பிற கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து விட்டன.


இந்த நிலையில் 2வது பெரிய கட்சியாக தற்போது நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளரை களம் இறக்கியுள்ளது. ஆசிரியை சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.




ஆசிரியை சீதாலட்சுமி தேர்தலில் போட்டியிடுவது இது 2வது முறையாகும். கடந்த லோக்சபா தேர்தலில் அவர் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.  திருப்பூர் தேர்தலில் சீதாலட்சுமி 95726 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பெற்றார். பாஜகவுக்கு அடுத்த இடம் சீதாலட்சுமிக்குக் கிடைத்தது. 

 

இந்த நிலையில் மீண்டும் சீதாலட்சுமிக்கு தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு வேட்பாளராக சீதாலட்சுமியை அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி. கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி கட்த 2013ம் ஆண்டு வரை ஆசிரியையாகப் பணியாற்றியவர் ஆவார். தற்போது முழு நேர அரசியலில் இருக்கும் இவரது கணவர் பொறியாளர் ஆவார். கோபிச்செட்டிப் பாளையத்தில் கல்லூரிப் படிப்பை முடித்த இவர், கோயம்பத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில் ஆய்வுப் படிப்பையும் முடித்துள்ளார். இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் மாரப்பம்பாளையம் ஆகும்.


விக்கிரவாண்டி தேர்தல் பாணியில் மீண்டும் வாய்ப்பு




விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அபிநயா என்பவர் போட்டியிட்டார். இவர் அதற்கு முன்பு நடந்த மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். அதைத் தொடர்ந்து வந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அபிநயாவுக்கு மீண்டும் வாய்ப்பளித்திருந்தார் சீமான்.


தற்போது இதே பாணியில் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு நடந்த தேர்தலில் தோல்வியைடந்த சீதாலட்சுமிக்கு ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ். கோமதி போட்டியிட்டார். அவருக்கு வெறும் 11 ஆயிரத்து 629 வாக்குகளே கிடைத்தன. 3வது இடத்தைப் பிடித்தார் கோமதி. அடுத்து 2023ல் நடந்த இடைத் தேர்தலில் மேனகா நவநீதன் போட்டியிட்டு 10 ஆயிரத்து 827 வாக்குகளைப் பெற்று 3வது இடத்தைப் பிடித்து டெபாசிட்டைப் பறி கொடுத்திருந்தார்.


தற்போது திமுக மட்டுமே முக்கியக் கட்சியாக ஈரோடு கிழக்கில் போட்டியிடும் நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டுமே மறு முனையில் முக்கியக் கட்சியாக  களம் காணவுள்ளது. கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்குகளை இக்கட்சி பெற்றாலே அதுவே பெரிய வெற்றியாகும். மேலும் பாஜக, அதிமுக வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. திமுகவுக்கு நெருக்கடி தர, நாம் தமிழர் கட்சிக்கு இக்கட்சியினர் வாக்களிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால் இப்படித்தான் விக்கிரவாண்டியில் எதிர்பார்த்தனர். ஆனால் திமுக அதிரடியாக அதிமுக வாக்குகளையும் சேர்த்து அள்ளியது நினைவிருக்கலாம். 


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்