சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

Apr 18, 2026,06:16 PM IST

சிவகங்கை: சிவகங்கை அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை தீயணைப்புத் துறையினர் லாவகமாக மீட்டனர்.


சிவகங்கை வட்டம் சொக்கநாதபுரம் பகுதியில் உள்ள பிரித்திங்கரா கோவில் மற்றும் ரேஷன் கடை அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் இன்று சுமார் மூன்று அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நெற்குப்பை சாத்தப்பா மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் கணேசன், உடனடியாக வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தார்.


தகவலின் அடிப்படையில், திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய சிறப்பு நிலை அலுவலர் மாரிமுத்து தலைமையில், தீயணைப்பு வீரர்கள் முத்துகிருஷ்ணன், சிவப்பிரகாஷ், இளையராஜா, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஓட்டுநர் பிரபு ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 




அவர்கள் குடியிருப்புப் பகுதியில் பதுங்கியிருந்த பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்தனர். பிடிபட்ட அந்தப் பாம்பை மதகுபட்டி அருகே உள்ள வனப்பகுதியில் விடுவதாகத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.


தகவல் தெரிவித்தவுடன் விரைந்து வந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளித்ததுடன், பாம்பிற்கும் எவ்வித தீங்கும் நேராதவாறு மீட்ட திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்குப் பொதுமக்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர். மேலும், இந்த மீட்புப் பணிக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கிய சேலம் வன அலுவலர் பழனிசாமி, தீயணைப்புத் துறை அலுவலர் ஆனந்த் மற்றும் சிவகங்கை வன அலுவலர் பெத்தபெருமாள் ஆகியோருக்கும் அப்பகுதி மக்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர்.


செய்தி, புகைப்படம்: ஆசிரியர் கணேசன்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்