கணவன் மனைவி – கதையும் மனையும் !

Nov 05, 2025,02:51 PM IST

- கவிதா உடையப்பன்


உத்தரவு பெறவே, உத்தமரிடமே 

உகந்த நேரத்தில், உள்ளார்ந்த வார்த்தைகளை 

உதிர்த்திடுவார், அந்த உத்தமி !


கஞ்சப் பாட்டி, பிசுகி வைக்கும்  

வெஞ்சனத்தை உண்டபின்  

மிஞ்சிக்கிடக்கும் தேங்காய் கீற்றை 

நெஞ்சம் மகிழ, கடித்து பசியாற்றினார் மௌனத் தாத்தா ! 


போதிய சம்பளம் இன்றி விரட்டும் 

பொல்லாத மனைவி மிரட்டும் 

வேலையாட்களை, சன்மானத்தொடு சமாதானப்படுத்துவார் 

வேட்டியை தும்பைப்பூ போல துவைத்துடுத்தும் கணவர்  !




கண்ணாலே பேசி, கண்ணாளனை மடக்கியவள்,  

கணக்குகள் தப்பி, காலங்கள் கடந்து தனித்து நிற்கிறாரே இன்று ! 


கண் துணியை பின்னி, தன்னை பொன்னைப்போல் பேணி 

மழையைப்போற்றி  மண்ணை வணங்கிய,

மணப்பெண்ணின் கரம் பிடித்த மணவாளன், 

கண்ணும் கருத்துமாய், மின்னும் கதிரவனின் கீழ், 

பண்ணையை செம்மையாக நடத்தினான் ! 


அறிந்தவளை அறியாதவள் என்று அன்று சித்தரித்தவன்,

அவள் இருந்தும் ஆதரவற்றுக் கிடக்கிறான் !


அப்பச்சி உழைத்துச்சேர்க்க, ஆத்தாள் அருவாக்கி சேமிக்க 

அவரைக்காய் பந்தலிலே காய்க்க, ஏலக்காய் அடுப்பங்கரையில் மணக்க 

ஆர்பாட்டம் இல்லாமல், அன்யோன்யமாய் வாழ்ந்தனர் அன்புத் தம்பதியர் ! 


(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் கவிதா உடையப்பன் ரத்தினா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்