டெல்லி: டெல்லியை குலுங்க வைக்கும் வகையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற பெயரில் இன்று ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது.
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. கடந்த வாரம் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்திய வரலாற்றிலேயே முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கெஜ்ரிவாலுக்காக இந்தியா கூட்டணிக் கட்சிகள் களத்தில் குதித்துள்ளன. மேலும் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டெல்லியில் வைத்து தங்களது பலத்தை பறை சாற்றவும் இந்த விஷயத்தைக் கையில் எடுத்துள்ளது இந்தியா கூட்டணி. அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்டவற்றை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கியது, பல்வேறு கட்சிகளுக்கு வருமான வரித்துறை மூலம் அபராதம் போட வைப்பது உள்ளிட்டவற்றைக் கண்டித்தும், கெஜ்ரிவால் கைதைக் கண்டித்தும் இன்றைய போராட்டம் நடைபெறவுள்ளது.

இன்றைய போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத சரத் சந்திர பவார் கட்சித் தலைவர் சரத் பவார், சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, திமுக சார்பில் திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்தியா கூட்டணியை உதறி விட்டு, மேற்கு வங்காளத்தில் தனித்துப் போட்டியிடும் திரினமூல் காங்கிரஸும் தனது பிரதிநிதியை போராட்டத்திற்கு அனுப்பி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அதன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். கெஜ்ரிவாலைப் போலவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரனும் பங்கேற்பார் என்று தெரிகிறது. அவர் நேற்று சுனிதா கெஜ்ரிவாலைச் சந்தித்து கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார் என்பது நினைவிருக்கலாம்.
இந்தப் போராட்டத்தை மிகப் பெரிய அளவில் நடத்துவதன் மூலம் வட மாநிலங்களை ஆச்சரியப்படுத்த இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளதாம். போராட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், இது தனிப்பட்ட யாருக்காகவும் நடத்தப்படும் கூட்டம் அல்ல.. மாறாக ஜனநாயகத்தைக் காக்கக் கோரி நடத்தப்படவுள்ள போராட்டம். மொத்த நாட்டுக்கானது. மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு நேரம் முடியப் போகிறது. இந்தியா கூட்டணி அதை இன்று உரத்த குரலில் நாட்டுக்குத் தெரிவிக்கும் என்றார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}