சென்னை: தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான முக்கிய சட்டப் போராட்டம் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தை எட்டியுள்ளது. இன்று வழக்கு கோர்ட்டுக்கு வந்தபோது நாளைக்கு விசாரணையை நீதிபதி பி.டி.ஆஷா ஒத்திவைத்தார். அதேசமயம், படத்தை 9ம் தேதிக்குப் பதில் 10ம் தேதிக்கு ஏன் தள்ளி வைக்கக் கூடாது என்றும் நீதிபதி கேட்டுள்ளார்.
இப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) வழங்கக் கோரி, படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) சார்பில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குதான் இன்று விசாரணைக்கு வந்தது.
நடிகர் விஜய் தனது அரசியல் வருகையை அறிவித்த பிறகு நடித்துள்ள கடைசித் திரைப்படம் என்பதால், 'ஜனநாயகன்' படத்தின் மீது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. இந்த ஆண்டு பொங்கலை ரிலீசாக ஜனவரி 09ம் தேதியன்று ஜனநாயகன் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

பொதுவாகப் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் போது, தணிக்கை வாரியம் சில காட்சிகளுக்கோ அல்லது வசனங்களுக்கோ ஆட்சேபனை தெரிவிப்பது வழக்கம். ஆனால், இந்தத் திரைப்படத்தின் அரசியல் உள்ளடக்கம் மற்றும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு சான்றிதழ் வழங்கப்படுவதில் சிக்கல் நீடிப்பதாகத் தெரிகிறது. திரைப்படத்தை முன்கூட்டியே திட்டமிட்ட தேதியில் வெளியிட வேண்டிய கட்டாயத்தில் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. சான்றிதழ் கிடைப்பதில் ஏற்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் படத்தின் விநியோகம் மற்றும் சர்வதேச வெளியீட்டைப் பாதிக்கும் என்பதால், தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக இதனை முறையிட்டது.
இந்த மனுவில், "திரைப்படத்தின் அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டுள்ள நிலையில், தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தும் வாரியம் இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை. இதனால் படக்குழுவினருக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அவசர வழக்கினை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இன்று (ஜனவரி 6, 2026) மதியம் 2:15 மணிக்கு இதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது. பின்னர் 3 மணிக்கு விசாரணை தள்ளிப் போனது. நீதிபதி பி.டி.ஆஷா மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த விசாரணையின் போது, படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்துவது போல காட்சிகள் இருப்பதாக சென்சார் வாரியம் ஆட்சேபனை தெரிவித்திருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக வந்த புகாரைத் தாக்கல் செய்யுமாறு சென்சார் வாரியத்திற்கு நீதிபதி உத்தரவிட்டு நாளைக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இ்நத விசாரணையின்போது ஜனவரி 9ம் தேதிக்குப் பதில் 10ம் தேதிக்கு பட ரிலீஸை தள்ளி வைக்க இயலுமா,, தை பிறந்தால் வழி பிறக்குமே என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். விஜய் மற்றும் எச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த அரசியல் அதிரடித் திரைப்படம், சமூகத்தில் நிலவும் முக்கியப் பிரச்சனைகளைப் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புரியாப் புதிர்!
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து.. தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிவிடும்.. மு.க.ஸ்டாலின்
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது.. முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு
பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் நடிகர் தேவன்: பரபரப்பு பேட்டி!
Motivational Short Story: சிற்றுயிர்களின் விழிப்புணர்வு மாநாடு
உள்ளபடிக் குடிநீரும் உப்பும் தான் கரிக்குதே!
387 வயசு இளமையான சென்னை.. எத்தனை எத்தனை சிறப்புகள்!
உதவியை உயர்ந்தவர்களுக்கு செய்வதை விட ஒருவரை உயர்த்துவதற்காக செய்!
Short Story: ருத்ர தாண்டவம்!
{{comments.comment}}