சென்னை: கரூரில் செப்., 27ல் நடைபெற்ற விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரில் 39 குடும்பத்தினரின் வங்கி கணக்குகளில் தவெக அறிவித்த ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து கடந்த ஒரு வருடமாக நடத்தி வருகிறார் விஜய். தவெக கட்சி 2026ல் தேர்தலில் களம் காணும் என்றும் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் சிறப்பாக செய்து வந்தார். கட்சிப்பணிகளை நடிப்பு பணிக்கு இடையில் செய்து வந்தார் விஜய். இதனையடுத்து, நடிகரும், தவெக தலைவருமான விஜய் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் மக்களை சந்தித்து வந்தார். திருச்சியில் தொடங்கி அரியலூர், நாமக்கல் ஆகிய நகரங்களில் அவரது மக்கள் சந்திப்பு வெற்றிகரமாக நடந்தது. மக்கள் கூட்டமும் அதிகமாகவே காணப்பட்டது.
ஆனால் கரூரில் நடந்த சம்பவம் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக மாறி விட்டது. கரூரில் அவர் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியானார்கள். பலர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய சம்பவமாக இது மாறிப் போய் விட்டது. பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தவெக கட்சியை சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டனர்.
சமீபத்தில் கட்சி தலைவர் விஜய்யை, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் சந்தித்து, கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து இன்று என்.ஆனந்த் சார்பில் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டது. அதில்,
தொண்டர்கள் யாரும் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தவெக கட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான பின்னர், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி 41 குடும்பங்களில் 31 பேரின் உறவினர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2 பேருடைய குடும்பங்களில் யாருடைய பெயருக்கு வரவு வைப்பது என்பதில் சிக்கல் இருப்பதால் அவர்களுக்குப் பின்னர் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
{{comments.comment}}