தலைவலியாக மாறும் கிளாம்பாக்கம்.. திருகுவலியாக மாறுவதற்குள் சுதாரிக்குமா திமுக அரசு?

Feb 11, 2024,10:35 AM IST

சென்னை: சென்னை மாநகரின் போக்குவரத்து சிக்கலைத் தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தினந்தோறும் புதுப் புது பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இதை உடனடியாக சரி செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தேர்தல் சமயத்தில் இது மிகப் பெரிய தலைவலியாக திமுக அரசுக்கு மாறக் கூடிய அபாயங்கள் உள்ளன.


சென்னை வண்டலூர் கிளாம்பாக்கத்தில் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து முனையம், சர்வதேச தரத்தில் அமைந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உண்மையிலேயே அட்டகாசமாக உள்ளது. சுத்தமாக உள்ளது. நவீன வசதிகளுடன் கூடியதாக இருக்கிறது.




ஆனால் அங்கு ஏகப்பட்ட குறைகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கின்றன. இதுதான் ஆச்சரியத்தையும், கூடவே அயர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. புது வீடு கட்டினால்  சின்னச் சின்னக் குறைகள் இருக்கத்தான் செய்யும். போகப் போக சரியாகும் என்பார்கள். ஆனால் கிளாம்பாக்கத்தில் ஒவ்வொரு நாளும் தினுசு தினுசான புகார்கள் வருகின்றன.


புகார்கள் வர வர அதிகாரிகள் அதை சரிசெய்யத்தான் செய்கிறார்கள். ஆனால் புகார்கள் தொடர் கதையாகி வருவதுதான் பல கேள்விகளை எழுப்புகிறது. கடந்த 2 நாட்களாக அங்கு போதிய அளவில் பஸ்கள் இல்லை என்று பொதுமக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர். பஸ்களுக்காக நீண்ட நேரம் காத்திருந்து சாலை மறியல், பஸ்களை சிறை பிடிப்பது போன்ற போராட்டங்களில் மக்கள் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. 


நேற்று முன்தினம்தான் இந்தப் பிரச்சினை என்றால் நேற்றும் இதே போல பிரச்சினை வெடித்தது. விடுமுறைக்காக பல்வேறு ஊர்களுக்காக வந்த பொதுமக்கள் போதிய பஸ்கள் இல்லாததால் நீண்ட நேரம் காத்துக் கிடந்துள்ளனர். வந்த சில பேருந்துகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது. பலர் பிளாட்பாரத்திலேயே ராத்திரி நீண்ட நேரம் காத்துக் கிடந்த அவலத்தையும் பார்க்க முடிந்தது. பலர் பிளாட்பாரத்திலேயே படுத்துத் தூங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.




அனைவரையும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்படுத்த உத்தரவிட்ட பின்னர் அங்கு பேருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டால் அது எந்த வகையில் நியாயமாகும்.  ஒரு பஸ் நிலையத்தில் மிக மிக முக்கியமானது எது.. வந்தால் பஸ் ஏறி ஊருக்குப் போய்ட்டே இருக்க வேண்டும். ஆனால் பஸ் நிலையம் இருக்கு.. அதுவும் எல்லா வசதிகளும் இருக்கு.. ஆனால் பஸ்ஸே இல்லை என்றால் எப்படி அது சரியாக இருக்கும். மக்களுக்குக் கோபம் வரத்தானே செய்யும். குழந்தை குட்டியுடன் குடும்பத்துடன் வரும் மக்கள் இப்படி பஸ் நிலையத்தில் காத்துக் கிடப்பதையும், பஸ்கள் வரும்போது ஓடி ஓடி இடம் பிடிக்க அவஸ்தைப்படுவதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அது பல்வேறு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.


ஒருபக்கம் ஆம்னி பஸ் காரர்கள் மக்களை கோயம்பேட்டுக்கு அலைய விடுகிறார்கள்.. இன்னொரு பக்கம் கிளாம்பாக்கத்துக்கு போங்க என்று அரசு கூறுகிறது. மக்கள் பஸ் நிலையம், பஸ் நிலையமாக அலையும் கொடுமை நியாயமானதல்ல.. இதில் தெளிவான திட்டங்களை முன்கூட்டியே வகுத்திருக்க வேண்டும்.. அனைத்துத் தரப்பையும் ஒருங்கிணைத்து சுமூக தீர்வுகளை கண்டிருக்க வேண்டும்.. ஆனால் அதைச் செய்யத் தவறியிருக்கிறார்கள்.. இதற்கு மக்கள் பலியாவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.


இதில் எங்கோ தவறு நடக்கிறது.. அந்தத் தவறு யாரிடம் இருக்கிறது .. ஏன் இப்படி பிரச்சினைகள் தொடர் கதையாகி வருகின்றன.. என்பது குறித்து அரசு தீவிர கவனம் செலுத்துவது நல்லது. இல்லாவிட்டால், தேர்தல் வரும் சமயத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை வளர விட்டு விஸ்வரூபம் எடுக்க விட்டு விட்டால் அது ஆளும் கட்சிக்குத்தான் ஆபத்தாக முடியும்.


சுதாரிக்குமா திமுக அரசு?

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்