அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

Jul 06, 2026,01:29 PM IST

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலுக்குப் பக்தர்கள் செலுத்தும் தங்கம் மற்றும் பண நன்கொடைகளில், கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் முதலே மிகப்பெரிய அளவில் முறைகேடுகளும் திருட்டும் நடந்து வந்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணைக்குழு (SIT), தினசரி லட்சக்கணக்கான ரூபாய் திருடப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.


தினசரி ரூ.6 - 8 லட்சம் வரை திருட்டு:

அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டதில் இருந்தே உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து தரிசனம் செய்து, தங்களால் இயன்ற பணத்தை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2025 மே மாதத்தில் இருந்தே கோயிலின் நன்கொடைப் பணத்தில் முறைகேடுகள் தங்குதடையின்றி நடந்து வந்துள்ளதாக SIT விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன்படி, நாளொன்றுக்கு தோராயமாக ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை திருடப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.


வெளிச்சத்திற்கு வந்த உண்மை:




முன்பு ராமர் கோயிலின் தினசரி டெபாசிட் தொகையாக ரூ.16 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை மட்டுமே வங்கியில் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்த திருட்டு விவகாரம் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து, முறைகேடுகள் வெளிவந்த பிறகு, கோயிலின் தினசரி டெபாசிட் தொகை திடீரென ரூ.24 லட்சம் முதல் ரூ.26 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், தினசரி பெருமளவிலான பணம் முறைகேடாகக் கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.


ரூ.15,000 சம்பளத்தில் ஆடம்பர வாழ்க்கை:

இந்த முறைகேடு தொடர்பாக அண்மையில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர்கள் வெறும் ரூ.15,000 மட்டுமே மாதச் சம்பளமாகப் பெற்று வந்த ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவ்வளவு குறைந்த சம்பளம் வாங்கும் இவர்கள், மிகக் குறுகிய காலத்திற்குள் சொகுசு வீடுகளைக் கட்டியதும், ஆடம்பரக் கார்களை வாங்கியதும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் இந்த திடீர் பணக்கார வாழ்க்கை முறைதான் காவல்துறையினருக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி, இறுதியில் இவர்களைச் சிக்க வைத்துள்ளது.


கோயில் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பை மீறி, இத்தனை மாதங்களாக இவ்வளவு பெரிய தொகையை எப்படித் திருடினார்கள் என்பது குறித்து SIT அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் இன்னும் பல முக்கியப் புள்ளிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என அஞ்சப்படுவதால், அயோத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்