சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

Jul 06, 2026,01:18 PM IST

சென்னை : தவெக அரசை கவிழ்க்க குதிரை பேரம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏ.,வும் ஆன செந்தில் பாலாஜி இன்று விசாரணைக்கு ஆஜராக திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் இன்று இதுவரை செந்தில் பாலாஜி ஆஜராகாததால், அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


தவெக அரசை கவிழ்க்க அக்கட்சி எம்எல்ஏ., இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து பலரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வந்தனர். தவெக அரசை கவிழ்க்க ரூ.180 கோடி வரை குதிரை பேரம் பேசப்பட்டதாகவும், இந்த பணம் பரிவர்த்தனைகள் அனைத்தும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்லி, அவரது சகோதரர் கரூர் அசோக் குமார் மூலமாக நடத்தப்பட்டதாக விசாரணையின் போது கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இன்று (ஜூலை 06) விசாரணைக்கு ஆஜராகும் படி செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.


ஆனால் சம்மனை வாங்க ஆள் இல்லாமல் வீடு பூட்டி இருந்ததால் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டு வாசல் கதவில் சம்மன் ஒட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியும் அவரது சகோதரரும் தொடர்ந்து தலைமறைவாக இருந்தது வருவதால் அவர்கள் வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களுக்கு தப்பிச் சென்று விடாமல் இருக்க திருவல்லிக்கேணி போலீசார் சார்பில் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.




சம்மன் அனுப்பப்பட்ட பிறகும் இன்று இதுவரை செந்தில் பாலாஜியோ அவரது சகோதரரோ விசாரணைக்கு ஆஜராகவில்லை என போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. ஏற்கனவே சம்மன் அனுப்பி, லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டும் விசாரணைக்கு ஆஜராகததால் அடுத்த கட்டமாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் ஆகியோரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்க வாய்ப்புள்ளது. 


முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்எல்ஏ, திமுக.,வில் செல்வாக்குமிக்க நபர் ஒருவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வேளை அவர் கைது செய்யப்பட்டு, அவர் மீதான குதிரை பேர குற்றச்சாட்டுக்கள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் அவரது எம்எல்ஏ., பதவி பறி போவதுடன் அவர் தேர்தல் கமிஷனால் தகுதிநீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு செந்தில் பாலாஜியால் எந்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்