பெண்களே.. நம் உரிமை நம் கையில்.. கண்ணையும் கருத்தையும் திறந்து வைங்க போதும்!

May 29, 2025,05:09 PM IST

முனைவர் ராணி சக்கரவர்த்தி


பெண், கல்வியாலும், வேலைக்குச் செல்வதாலும், நடை, உடை பாவனைகளை மாற்றிக் கொள்வதாலும் மட்டும் சம உரிமை பெற இயலாது. பெண்மையைப் பற்றி, பெண் உரிமை பற்றி, பெண்கள் மனதில் விதைக்கப்பட்டு, ஆழமாக வேர் ஊன்றியிருக்கும் பழமை எண்ணங்கள் மாற வேண்டும். பெண்களை அடக்கும் வேலையையும், சிந்தனைகளுக்கு வேலி போடும் பணியையும் இந்த ஆண் சமூகம் பெண்களிடமே பெருந்தன்மையாகத் திணித்திருப்பது தான் அவர்களின் அறிவாளித்தனத்தின் உச்சகட்டம். குழந்தை வளர்ப்பு பெண்களிடம் இருந்தாலும், ஆண் குழந்தையையும், பெண் குழந்தையும் சமமாக வளர்க்க மறந்து விடுகிறோம் அல்லது மறுத்து விடுகிறோம்.


படித்து நல்ல பணியில் உள்ள பெண்களே, ஆண் மகனுக்காக கோவில் தரிசனத்திற்கும், கருத்தரிப்பு மருத்துவமனையின் முன் பதிவுகளுக்கும், காத்துக் கிடக்கும் அவலம் இன்னமும் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. இரண்டாவது பெண் குழந்தைப் பிறந்தால், பல குடும்பங்கள் 30 நாட்கள் துக்கம் அனுசரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இதற்கு தலைமை வகிப்பது அந்தப் பெண்ணின் மாமியார் தான். ஆண் வாரிசு இல்லை என்று தன் மகனுக்கு இன்னொரு பெண் தேடும் மாதர் குல திலகங்கள், தற்போதைய சூழலிலும் நிக்கமற நிறைத்திருக்கிறார்கள்.




பொம்பளை மாதிரி என்பதை கோழைத்தனத்தின் வெளிப்பாடாகவும், ஆம்பளை மாதிரி என்பதை வீரத்தின் வெளிப்பாடாகவும், பெண்களே புரிந்து கொள்வது தான் விதியின் சதி. என் மகள், வீட்டு வாசலைத் தாண்ட மாட்டா, அவ்வளவு அடக்க ஒடுக்கமாக வளர்ந்திருக்கிறேன் என்று பெருமையடித்துக் கொள்ளும் பெண்ணின் அறிவும், அவள் மகளின் இயலாமையையும் நினைத்து மனம் பதற தான் செய்கிறது.


திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தற்போதைய பெரிய நகைச்சுவையே ஆண், பெண்ணின் உடையணிந்து நடப்பதும், பேசுவதும், ஆடுவதும் தான். இது, பெண்மையைக் கேவலப்படுத்தும் மிகப்பெரிய பெண்ணியக் கொலை என்று கூட தெரியாமல். பெண்களும் ரசிப்பது தான் வேதனை.


தொலைக்காட்சி தொடர்களில் அடங்கி நடப்பவன் நாயகியாகவும், அடங்காமல் இருப்பவள் வில்லியாகவும் சித்தரிப்பது, தினம் தினம் நம் அனுமதியோடு நம் வீட்டுக்கு வரும் கற்பிதங்கள். இத்தகையத் தொடர்களைப் பெண்கள் முழுவதுமாக புறக்கணிக்காத வரை பெண் உரிமை என்பது எட்டாக் கனியாகவே இருக்கும். பெண்ணியக் கொலையில் திரைப்படங்கள் பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு ஆணைக் கேவலப்படுத்த, பெண் உடையை அவனுக்கு அணிவிப்பது, ஒரு ஆணின் கைபட்டால், எப்படிப்பட்ட பெண்ணானாலும் அடங்கி விடுவாள் என காட்சிப்படுத்துவது, கற்பழிக்கப்பட்ட பெண், தன்னைக் கற்பழித்தவனைத் தேடிச் சென்று, காதலித்துக் கரம் பிடிப்பது போன்ற காட்சிகளில் பெண்மை இழிவு படுத்துகிறது என்பதைப் பெண் முதலில் உணர வேண்டும்.




இப்படியான திரைப்படங்கள், இளைய தலைமுறையினருக்கு, பெண்கள் பற்றி தவறுதலான கற்பிதத்தை ஏற்படுத்தும். கதாநாயகன், தனக்குப் பிடித்தப் பெண்ணை, அவளுக்கு விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், விரட்டி விரட்டிக் காதலிப்பது, காதலிக்க மறுத்தால், கொலை செய்வது நம் இளைய சமுதாயத்திற்குத் தவறான முன் மாதிரியாக அமைந்து விடுகிறது. பெரும்பாலானோரைச் சென்றடையும், வலுவான ஊடகமாக விளங்கும், தொலைக்காட்சித் தொடர்களும், திரைப்படங்களும், பெண்மைக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் அளித்தால், சமுதாயத்தின் கண்ணோட்டம் மாறும். வாழ்க்கையும் அழகாகும். பெண்ணியம் உள்ள பெண்கள், திரைப்படத் துறையில் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும்.


பெண்மையை இழிவு படுத்தப்படும் போது, பெண்கள், தங்கள் குறைந்தபட்ச எதிர்ப்பையாவதுக் காட்ட வேண்டும். பெண்ணை தெய்வமாகவும் வணங்க வேண்டாம், தெருவில் விட்டு அவமானப்படுத்தவும் வேண்டாம். தன்னைப் போலவே உணர்வுகள், ஆசைகள், உரிமைகள் உள்ள சக மனுசியாக மதித்தாலே போதும்.


சமுதாயத்தில்,  சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படும் எல்லாக் கெட்ட வார்த்தைகளும் பெண்ணைக் கேவலப்படுத்தும் வகையில் தான் உள்ளது.  அதைப்பற்றி உணராமலே, பெண்களும் அதை வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். நம் இனத்தை நாமே கேவலப்படுத்துகிறோம். இந்தச் சமூகம் நம்மில் விதைத்திருக்கும் மாதவிடாய் பற்றிய கட்டுப்பாடுகளும், அச்சமும் நம் முன்னேற்ற பாதையின் தடைக்கற்களாகவே உள்ளன. இதன் வெளிப்பாடுதான், சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த போது, அந்த மூன்று நாட்களை எவ்வாறு சமாளித்திருப்பார்? என்று ஒரு கல்லூரி ஆசிரியை கேட்டது. பல வீடுகளில் இந்த தீட்டு எண்ணம்  இருக்கத்தான் செய்கிறது. இது சரியா? தவறா? என்று கேள்வி கேட்கக்கூட நம்மில் பலருக்குத் தைரியம் இல்லாமல் பயம் பற்றியுள்ளது. கருவேப்பிலை செடி கூட கருகிவிடுமாம், அருகில் செல்லாமல் தானே இருக்கிறோம்.


இதனால் தான் சொல்கிறேன். பெண்கள் நமக்குப் போட்டுக் கொண்டுள்ள கட்டுகளை வெட்டி எறியாமல், ஆண்களிடம் சம உரிமை கேட்டு சுத்தவும் வேண்டாம், கையேந்தி நிற்கவும் வேண்டாம். நம் உரிமை நம் கையில் தான் உள்ளது. கண்ணையும் கருத்தையும் திறந்து பார்த்தால் போதும். பெண்மை பெருமை அடையும்.


கட்டுரை: முனைவர் ராணி சக்கரவர்த்தி எழுதிய மனதோடு பேசுவோம் தோழி நூலிலிருந்து.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!

news

கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்

news

மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!

news

அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!

news

அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!

news

வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி

news

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்