இளம் பெண்களை மொட்டையடித்துக் கொண்டு வாழ ஜக்கி வாசுதேவ் அறிவுறுத்துவது ஏன்.. ஹைகோர்ட் கேள்வி

Oct 01, 2024,11:19 AM IST

சென்னை:   தனது மகளை ஆன்மீக தலைவர் ஜக்கி வாசுதேவ் திருமணம் செய்து கொடுத்து, நல்ல நிலைக்கு ஆளாக்கி வாழ வைத்துள்ளார். ஆனால் மற்ற பெண்கள் மொட்டையடித்துக் கொண்டு துறவி போல வாழுமாறு அவர் வலியுறுத்துவது ஏன் என்று  சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.


ஆன்மீக தலைவரான ஜக்கி வாசுதேவ் தனது இரு மகள்களையும் மொட்டையடித்துக் கொண்டு துறவிகள் போல ஈஷா பவுண்டேஷனிலேயே தங்க வைத்துள்ளதாகவும், அவர்களை மீட்கக் கோரியும் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர்  எஸ்.காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.




அவரது மகள்களுக்கு  தற்போது முறையே 42 மற்றும் 39 வயதாகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காமராஜின் இரு மகள்களும் நேரில் ஆஜரானார்கள். தங்களது சொந்த விருப்பத்தின் பேரிலேயே ஈஷா பவுண்டேஷனில் தங்கியிருப்பதாக இருவரும் நீதிபதிகளிடம் தெரிவித்தனர். தாங்கள் கட்டாயப்படுத்தி அடைத்து வைக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.


இதையடுத்து காவல்துறைக்கு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கை நாங்கள் மேலும் விசாரிக்க விரும்புகிறோம். ஈஷா பவுண்டேஷன் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்கு விவரங்களையும் தொகுத்து எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


விசாரணையின்போது நீதிபதி சிவஞானம் கூறுகையில், இவர் (ஜக்கி வாசுதேவ்) தனது மகளை நன்றாக திருமணம் செய்து கொடுத்து நல்ல முறையில் செட்டில் செய்துள்ளார். ஆனால் மற்ற இளம் பெண்கள் மொட்டையடித்துக் கொண்டு பரிதாபகரமான வாழ்க்கை போல வாழ வேண்டும் என்று ஏன் விரும்புகிறார் என்பது புரியவில்லை என்று தெரிவித்தார்.


தனது இரு மகள்களையும் ஜக்கி வாசுதேவ் மூளைச் சலவை செய்து தனது ஆசிரமத்திலேயே தங்க வைத்திருப்பதாக காமராஜ் குற்றம் சாட்டுகிறார். ஆனால் இதை ஈஷா பவுண்டேஷன் மறுத்துள்ளது. இரு பெண்களும் அவர்களது சுய விருப்பத்தின் பேரில்தான் தங்கியிருப்பதாக அது கூறுகிறது. கடந்த 10 வருடமாக தனது மகள்களை மீட்க காமராஜ் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்