பூஜை போட்டாச்சு.. மேலூர் அருகே பிரமாண்ட கட்டடத்திற்கு இடம் மாறுகிறது மதுரை மத்திய சிறை

Jan 26, 2025,01:49 PM IST

மதுரை: மதுரை நகரின் மத்தியப் பகுதியில் கடந்த 150 வருடத்திற்கும் மேலாக இருந்து வரும் மத்திய சிறைச்சாலை, மேலூர் அருகே செம்பூர் என்ற இடத்தில் கட்டப்படவுள்ள பிரமாண்ட சிறைச்சாலைக்கு இடம் மாறவுள்ளது. இதற்கான பூமி பூஜை நடைபெற்று பணிகள் தொடங்கியுள்ளன.


தமிழ்நாட்டில் சென்னை (3 சிறை), மதுரை, கோயம்பத்தூர், திருச்சி, வேலூர் (2 சிறை), திருநெல்வேலி, கடலூர், புதுக்கோட்டை, சேலம் ஆகிய ஊர்களில் மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. இதில் சென்னை புழல் பகுதியில் மொத்தம் 3 சிறைச்சாலைகள் உள்ளன. அதில் ஒன்று தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கானது. இன்னொன்று விசாரணைக் கைதிகளுக்கானது. 3வது சிறை, மகளிருக்கானது. அதேபோல வேலூரிலும் மகளிருக்கு தனி சிறையும், மற்ற கைதிகளுக்கு தனி என இரண்டு சிறைச்சாலைகள் உள்ளன.


தமிழ்நாட்டில் தற்போது உள்ள மத்திய சிறைச்சாலைகளிலேயே மிகப் பழமையான சிறை என்றால் அது பாளையங்கோட்டை சிறைச்சாலைதான். 1880ம் ஆண்டு கட்டப்பட்டது இந்த சிறை. 




தமிழ்நாட்டின் முக்கியமான சிறைச்சாலைகளில் ஒன்றாக மதுரை மத்திய சிறைச்சாலை விளங்குகிறது. 1865ம் ஆண்டு கட்டப்பட்டது மதுரை மத்திய சிறைச்சாலை. கிட்டத்தட்ட 31 ஏக்கர் பரப்பளவில் இந்த சிறை உள்ளது. இங்கு 1250 கைதிகள் வரை வைக்க முடியும். தமிழ்நாட்டு மத்திய சிறைச்சாலைகளிலேயே மிகவும் சிறிய சிறையாகவும் இது இருப்பது குறிப்பிடத்தக்கது. மற்ற  மாநகரத்து சிறைச்சாலைகள் எல்லாம் மிகவும் விஸ்தீரமான இடங்களில் உள்ளன. ஆனால் மதுரை சிறைதான் குறுகலாக உள்ளது. இதனால் கைதிகளை இருப்பு வைப்பதில் பெருமளவில் இட நெருக்கடி ஏற்படுகிறது.


இதையடுத்து வேறு புதிய இடத்திற்கு மத்திய சிறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வந்தது. மேலும் நகருக்கு மத்தியில் சிறை இருப்பதால் பல்வேறு நிர்வாக சிரமங்களும் ஏற்படுவது அரசுக்குத் தெரிவிக்கப்பட்டு வந்தது. சென்னை மத்திய சிறையை புறநகரான புழல் பகுதிக்கு மாற்றியது போல மதுரை சிறையையும் வெளியே கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வந்தது.


இந்த நிலையில்  தற்போது மதுரை அருகே உள்ள மேலூர், செம்பூர் பகுதியில் இடம் கண்டறியப்பட்டு அங்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு சிறைச்சாலை அந்த இடத்திற்கு மாற்றப்படவுள்ளது. செம்பூர் பகுதியில் கிட்டத்தட்ட 90 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய சிறை வளாகம் அமையவுள்ளது. பல்வேறு நவீன வசதிகளுடன் கூடியதாக இந்த சிறை வளாகம் கட்டப்படவுள்ளது.  புதிய சிறை அமைக்கப்படவுள்ள இடத்தில் பூஜை போடப்பட்டு கல் ஊன்றும் நிகழ்வு நடைபெற்றது. சிறைத்துறை டிஐஜி முருகேசன் இதில் கலந்து கொண்டார். 


புதிய சிறைச்சாலை வளாகமானது, ஆண் கைதிகளுக்கு, பெண் கைதிகளுக்கு என தனித் தனி பிளாக்குகளைக் கொண்டதாக அமையும். இதுதவிர மேலும் பல்வேறு வசதிகளுடன் கூடியதாகவும் புதிய சிறைச்சாலை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய கட்டடத்திற்கு சிறைச்சாலை மாற்றப்பட்டதும், பழைய சிறைச்சாலை வளாகமானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் பிரமாண்டமான மருத்துவனை கட்டப்பட்டு அங்கு மகப்பேறு மருத்துவ் மட்டும் பார்க்கும் பிரிவை அமைக்கவுள்ளதாகவும் தெரிகிறது. மிகப் பெரிய மகப்பேறு மருத்துவமனை இங்கு அமைக்கப்பட்டால் மதுரை மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்து மாவட்ட மக்களும் மிகப் பெரிய அளவில் பலனடைய முடியும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.


தற்போது மதுரை அரசு மருத்துவமனை கட்டடத்திலும் இட நெருக்கடி உள்ளது. மிகப் பெரிய அளவில் கூட்ட நெரிசலும் எப்போதும் காணப்படுவதால், ஏற்கனவே பழைய அண்ணா பேருந்த நிலையப் பகுதியிலும் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. தற்போது பழைய சிறைச்சாலை வளாகத்திலும் அரசு மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்