மற்றவர்கள் மகிழ்ச்சியாக வாழ.. மண்ணில் படைக்கப்பட்ட .. மாமனிகளுக்கு.. மகளிர் தின வாழ்த்துகள்!

Mar 08, 2024,01:31 PM IST

எத்தனை கோடி வருடங்கள் தவமிருந்தாலும் 

இத்தனை அழகாய் தோன்றிடும் பூமியில் 

இறைவன் அருள் பெற்றால் மட்டுமே 

பெண்ணாய் பிறக்க முடியும் !

தலைமுறையை சுமந்திடும் தாய்மையும் பெண்ணே!

இல்லத்தை காத்திடும் மங்கையும் பெண்ணே!

துன்பத்தை துடைத்திடும் நங்கையும் பெண்ணே!


பெண்கள் 

சக்தி எல்லாம் ஒன்று திரட்டி

சரித்திரம் படைக்கும் சாதனை பூக்கள்! 

கலகம் செய்யும் மானுடத்தில் 

உலகம் செய்ய விரும்பும் உன்னத உள்ளங்கள்!

ஒளியாய்த் தங்களுக்குள்ளே 

"தன்னம்பிக்கை" என்னும் ஒளியை 

தாங்கியுள்ள தாரகைகள் 

ஆசை கனவுகளுக்குப் பொட்டிட்டுப் பூச்சூடி 

அழகு பார்க்கும் தேவதைகள்! 


பேதை நிலையில் பேரின்பம் அடையவும் 

பெதும்பை நிலையில் பெருமை பெறவும்

மங்கை பருவத்தில் மகிழ்ச்சியில் திளைக்கவும்

மடந்தை பருவத்தில் மனம் புரிந்து 

அரிவை நிலையில் ஆனந்த குழந்தை பெற்று 

தெரிவை நிலையில் தெளிவுடன் குடும்பத்தைக் காத்து

பேரிளம் பெண்ணாய்  போற்றுதலுடன் வாழ்வதற்கு

பெண்களால் மட்டுமே இயலும்!


வானத்தின் அழகை அதன் நீல நிறம் வசப்படுத்தும்!

நிலவின் அழகை அதன் பாலொளி வசப்படுத்தும்!

தென்றல் காற்று நம் மேனியை வருடியே வசப்படுத்தும் !

இதற்கெல்லாம் மேலாக 

பிறப்புக்களின் புனிதத்தை "பெண்மை"யே வசப்படுத்தும் !




பொறுமையில் சீதையாய், வீரத்தில் ஜான்சி ராணியாய் 

வெற்றியில் வேலு நாச்சியாராய், கம்பீரத்தில் இந்திராவாய் 

கற்பில் கண்ணகியாய், காவலில் கிரண் பேடியாய்

சாதனையில் கல்பனா சாவ்லாவாய், சமூக சேவையில் அன்னை தெரசாவாய் 

தரணி போற்றும் தங்கப் பெண்ணாய் 

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்

சாதிக்கத் துடிக்கும் சிங்கப்பெண்ணாய் 

சரித்திரம் படைக்கும் புரட்சி பெண்ணாய் 

இப்படி மனித வாழ்க்கையில் 

பெண்களின் சாதனை மகத்தானது!

பெண்கள் தொடாத துறையும் இல்லை !

பெண்கள் செய்யாத சாதனைகளும் இல்லை !


பெண் என்பவள் 

ஜனனத்தின் பிறப்பிடம்! தியாகத்தின் உறைவிடம்!

அன்பின் அடையாளம்! பண்பின் புகலிடம்!

பெண் என்பவள் விதையாக இருந்தால் மட்டுமே

ஆண் என்பவன் கனியாக கனிய முடியும்!

பெண் என்பவள் 

தன்னை அதிகம் வெளிக்காட்டாத

வேராக இருந்தால் மட்டுமே

ஆண் என்பவன் உயரமாக வளர முடியும் 


பெண் என்பவள் 

பெற்றோர் சுட்டெடுத்த மண்!

கற்பொளி வீசுவதில் பொன்!

மழலை மேகங்கள் விளையாடும் விண்!

குடும்பத்தை தாங்கி நிற்பதில் தூண்!

தன் மக்களை காப்பதில் கண்!

இல்லற இன்பத்தின் தேன்!

இவளை மதியாத மனிதரெல்லாம் வீண்!


மங்கையராகப் பிறப்பதற்கே - நல்ல

மாதவம் செய்திட வேண்டுமம்மா என்ற வாக்கிற்கேற்ப

மகளாய் மகுடம் தரித்து

மருமகளாய் மறு வீடு புகுந்து 

மனைவியாய் மணவாளன் கைகோர்த்து 

மசக்கையாகி மறு பிறவி எடுத்து

மழலை மொழியில் மகிழ்ச்சி கண்டு 

மங்காத அறிவொளியும் தந்து

மருமகளுக்கோ மருமகனுக்கோ 

மற்றும் ஒரு தாயாகி 

மனையை காத்து

மற்றவர் நலம் காத்து 

மனம் தளராது 

மடியும் வரை 

மற்றவர்கள் மகிழ்ச்சியாக வாழ 

மண்ணில் படைக்கப்பட்ட 

மாமனிகளாம் மாதருக்கு

மா உலகமும் காத்திட

மாபெரும் சாதனைகள் படைத்திட 

இந்த மகளிர் தின விழாவில் 

மனதார வாழ்த்துகிறோம்


கவிதை: வி. ராஜேஸ்வரி, உதவியாளர், மதுரா கல்லுரி, மதுரை.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்