மும்பை: கர்நாடக மாடலே இனி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளின் பிரதான ஆயுதமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் திட்டமிட்டு வெற்றியை கொத்திக் கொண்டு போனது போல மகாராஷ்டிராவிலும் அதிரடி காட்ட தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கட்சிகள் தீர்மானித்துள்ளன.
கர்நாடகாவில் பலம் பொருந்திய பாஜக ஆட்சி இருந்து வந்தது. "ஆபரேஷன் லோட்டஸ்" என்று கூறி எம்.எல்.ஏக்களை பிற கட்சிகளிலிருந்து அபகரித்து அமைக்கப்பட்ட ஆட்சிதான் கர்நாடக பாஜக ஆட்சி. தற்போது அந்த ஆட்சியை அதிரடியாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது காங்கிரஸ்.
கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்டு அதிர வைத்துள்ளது காங்கிரஸ். இதுவரை இல்லாத அளவுக்கு பாஜகவுக்கு மிகப் பெரிய அடியையும் கொடுத்துள்ளது. வாக்கு வங்கி சிதறவில்லை என்ற போதிலும் கூட பாஜக தனது முக்கிய பலமான லிங்காயத்துகளின் ஆதரவை இழந்துள்ளது. இதற்குக் காரணம், ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட பல முக்கியங்களை காங்கிரஸ் தன் பக்கம் இழுத்ததுதான். மேலும் லிங்காயத்துகளுக்கு பெரிதாக எதுவும் பாஜக செய்யாமல் போனதும் அதற்கு எதிராக போய் விட்டது.
இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக துல்லியமாக திட்டமிட்டு, அழகாக ஸ்கெட்ச் போட்டு மிகவும் விரிவான முறையில் தனது தேர்தல் உத்திகளை வகுத்திருந்தது காங்கிரஸ். இதற்கு முக்கியக் காரணம் ராகுல் காந்திதான். அவரது ஆலோசனைப்படிதான் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அணுகுமுறைகள் இருந்துள்ளன. சசிகாந்த் செந்தில் போன்ற புத்திசாலிகளைக கரெக்டாக பயன்படுத்தியதும் அவர்களுக்கு எளிதாகி விட்டது. அதை விட முக்கியமாக, டி.கே.சிவக்குமார் போன்ற போராளியை மாநிலத் தலைமைப் பதவியில் அமர வைத்தது கூடுதல் பலமாகி விட்டது.
ஒரு புத்திசாலியை வீழ்த்த நாம் அவனை விட மிகப் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். பாஜகவை அப்படி போய்த்தான் வீழ்த்தியுள்ளது காங்கிரஸ். இந்த காங்கிரஸ் வெற்றி பார்முலா நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது. அனைவரையும் ஒரே புள்ளியில், காங்கிரஸ் தலைமையில் ஒருங்கிணைக்க இந்த கர்நாடக வெற்றி மிகப் பெரிதாக உதவும் என்றும் நம்பப்படுகிறது. அதற்கான அறிகுறி முதலில் மகாராஷ்டிராவில் தென்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா,மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் சரத் பவார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,கர்நாடக காங்கிரஸ் வெற்றி மாடல் அனைத்து மாநிலங்களுக்கும் தேவை. இதை வைத்துத்தான் இனி எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க வேண்டும். அனைவரும் இணைய வேண்டும். குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்து அதன்படி செயல்பட வேண்டும். கர்நாடக தேர்தல் முடிவுகள் நல்லதொரு செய்தியைக் கொடுத்துள்ளன. இங்கு ஏற்பட்டது அனைத்து மாநிலங்களுக்கும் பரவ வேண்டும். இதற்கான வேலைகளை நாங்கள் தொடங்கி விட்டோம் என்றார் பவார்.
இதேபோன்ற மன நிலையில்தான் மகாராஷ்டிர காங்கிரஸ் கூட்டணியும் உள்ளது. அக்கூட்டணியில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்துள்ளன. அடுத்த ஆண்டு முற்பகுதியில் மகாராஷ்டிர சட்டசபைக்குத் தேர்தல் வரவுள்ளது. அதேபோல லோக்சபா தேர்தலும் வரவுள்ளது. இந்த இரு தேர்தல்களையும் ஒருங்கிணைந்து சந்திக்கவும், கர்நாடகா பாணியில் திட்டமிட்டு செயல்படவும் இந்தக் கூட்டணியின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
{{comments.comment}}