பஹல்காம் பரிதாபம்.. சிந்தூரைப் பார்த்து சினம் கொண்டவனை சிந்தூர் சாய்த்தது!

Apr 22, 2026,02:48 PM IST

- எம்.கே.திருப்பதி, திருப்பூர்


பஹல்காம் 

பல உயிரின் கனவுக்கு 

நோவைக் காட்டியது!


சகோதரர் என  

சாயும் சொந்தங்கள் 

சாவைக் காட்டியது!


சொர்க்க பூமியின் 

சுவிட்சர்லாந்து என 

சொல்லப்படும்

பைசரன் பள்ளத்தாக்கு...


அன்று

மத ரத்தம் சிந்தியது!

மனிதம் கொன்று -- ஆங்கு

மதப்பித்து முந்தியது!




பொட்டைப் பார்த்து ஒரு

பெட்டை கேட்டான் 

நீ 'இந்துவா' என்று!


'ஆம் 'என்றாள் அத்தாய்

இந்துவாய் நின்று!


அடுத்த நொடி

இறங்கியதுஅங்கு 

மதத் தோட்டா!


இழிசெயல் புரிந்தனர் 

இருவர் கூட்டா!


துப்பாக்கி துவண்டது!

தோட்டா அழுதது!

அஃறினை இப்படி!


ஆறறிவு எப்படி...?

பாம்புக்கு வார்த்த

பால் போல்...

இருந்தனர் அப்படி!


வந்தது அம்பு...

வர வைத்தது 

வண்மை குணங்கள் 

வற்றிப்போன வம்பு! 


கானகம் சென்றது

கால் நூறு!

காட்டுமா கனிவு இனியும் 

கட்டுக்கடங்கா காட்டாறு?


பாரதத்திலிருந்து புறப்பட்டது 

பலவகை மின்னணு பாசம்!

பதறிப் போனது 

பக்கத்து தேசம்!


சிந்தூரைப் பார்த்து 

சினம் கொண்டவனை 

சிந்தூர் சாய்த்தது!


இனம் பார்த்து

பிணம் பார்த்தவனை 

பிரமோஸ் மாய்த்தது!


இருபத்தாறு

இன்னுயிர்களின் 

இழப்பில்...

இந்தியா சொன்ன

இறுதிச் செய்தி....


'பலம் பார்த்து மோது '

'குலம் பார்ப்பது தீது!'


(பஹல்காம் நினைவு நாள்.. எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்