சென்னை : தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுக.,வை சேர்ந்த பலரும் விஜய்யின் தவெக.,வில் இணைந்து வருகிறார்கள். இதனால் அதிமுக.,வில் தொடர்ந்து பரபரப்புகளும், அடுத்தடுத்த மாற்றங்களும் நிகழ்ந்து வருகிறது.
அதேசமயம், பாஜக கூட்டணியில் தொடரும் அதிமுகவிலிருந்து அதிக அளவிலான தலைவர்களை தனது கட்சியில் சேர்ப்பதன் மூலம் மக்களுக்கு என்ன செய்தியை சொல்ல வருகிறது தவெக என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் அதிமுக.,வில் இருந்த செங்கோட்டையன், தவெக.,வில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் வெற்றி பெற்று, தற்போது தமிழகத்தின் வருவாய்த்துறை அமைச்சராக ஆகிய விட்டார். இதனால் தங்களுக்கு அமைச்சர் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் எஸ்.பி.வேலுமணி - சி.பி.சண்முகம் தலைமையிலான 25 அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது ஆதரவு அளித்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விஜய்யும் எஸ்.பி.வேலுமணி தரப்பினரை நேரில் சென்று பார்த்தார். இதனால் அமைச்சர் பதவி கன்ஃபார்ம் என நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால் தங்களுக்கு ஆதரவு அளித்த திமுக., கூட்டணியை சேர்ந்த கட்சிகளுக்கு மட்டும் அமைச்சர் பதவி கொடுத்து விட்டு, அதிமுக.,வினரை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார் விஜய். பல்வேறு சட்ட சிக்கல்கள் மற்றும் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படும் என்பது உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவை விஜய் எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஏமாற்றமடைந்த அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் என்ன செய்வது என தெரியாமல் குழப்பமடைந்தனர். இந்த நிலையில் 4 அதிமுக எம்எல்ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக.,வில் சென்று இணைந்தனர். வேறு வழி இல்லாததால், எம்எல்ஏ.,பதவியை ராஜினாமா செய்ய மனம் இல்லாததால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர், அவருடன் இணைந்து செயல்பட சம்மதம் தெரிவித்து, சபாநாயகரிடமும் கடிதம் அளித்து விட்டு வந்துள்ளனர்.
சிவி சண்முகம்- சி விஜய பாஸ்கர் நிலை என்ன?
இருந்தாலும் இபிஎஸ் தலைமையை ஏற்க மனம் இல்லாத சி.வி.சண்முகம் தனது எம்எல்ஏ.,பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக.,வில் சென்று இணையலாமா என ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கனவே இவர், எம்எல்ஏ.,வாக வெற்றி பெற்றதால், தனது ராஜ்யசபா எம்.பி., பதவியையும் ராஜினாமா செய்து விட்டார். இதனால் தற்போது எம்எல்ஏ.,வியையும் இழக்க வேண்டுமா என்பது பற்றி ஆலோசித்து வருகிறார்.
மற்றொரு புறம் புதுக்கோட்டையில் தனது ஆதரவாளர்கள் 500 பேரை திரட்டி, அதிமுக.,வில் நீடிப்பதா அல்லது தவெக பக்கம் செல்லலாமா கருத்து கேட்டு வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். இவரும் தவெகவில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு பலமாக நிலவுகிறது. விஜயபாஸ்கரை கட்சியில் சேர்த்தால் புதுக்கோட்டையில் தவெகவுக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
தவெகவில் இணைந்த வெல்லமண்டி நடராஜன்
இதற்கிடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவெக.,வில் சென்று இணைந்துள்ளார். அவரைத் தொடர்ந்து அதிமுக தொழிற்சங்க தலைவர் கமலக் கண்ணனும் தனது ஆதரவாளர்களுடன் சென்று தவெக.,வில் இணைந்துள்ளார்.
இப்படி அதிமுக.,வை சேர்ந்த பலரும் தவெக நோக்கி படையெடுத்து வருவதால் அடுத்து தவெக.,வில் சென்று இணைய போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எஸ்.பி.வேலுமணி தரப்பினர் இபிஎஸ் தரப்பை சந்தித்து சமரசம் செய்து கொண்டதால் அதிமுக.,வில் நிலவிய குழப்பங்கள் முடிவிற்கு வந்து விட்டதாக நினைத்தால், இன்னும் பலர் தவெக பக்கம் செல்லும் நிலையில் உள்ளதால் அதிமுக.,வில் இன்னும் குழப்பம் முடிவுக்கு வராமல் உள்ளது.
இதற்கிடையே, இன்று பனையூரில் நடந்த பல்வேறு கட்சியினர் தவெகவில் இணையும் விழாவில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசும்போது, விரைவில் 90 சதவீத அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள் என்று பேசியுள்ளார்.
ஒரு வேளை அப்படி நடந்தால் அப்போது தவெக அதிமுகவின் மறு வடிவமாக மாறி விடுமே என்ற கருத்து கிளம்பியுள்ளது. அது விஜய்க்கும், அவரது இமேஜுக்கும் நலம் பயக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
{{comments.comment}}