சந்திரபாபு நாயுடு  பதவியேற்பில்.. ரஜினிக்கு பின் சீட்டில் ஓ.பி.எஸ்.. ஓடிப் போய் பேசிய பாலய்யா!

Jun 12, 2024,05:18 PM IST

அமராவதி:  ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்ற விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ரஜினிக்கு பின் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தார் ஓ.பி.எஸ். என்பது குறிப்பிடத்தக்கது.


ஆந்திர மாநிலத்தின் முதல்வராக நான்காவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார் சந்திரபாபு நாயுடு. அமராவதியில் நடந்த பிரமாண்ட பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.


ஆளுநர் அப்துல் நசீர், முதல்வருக்கும், பிற அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த்துடன் கலந்து கொண்டார். அவருக்குப் பின் வரிசையில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமர வைக்கப்பட்டிருந்தார். சிரஞ்சீவி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், திரையுலகினரும் விழாவில் கலந்து கொண்டனர்.




ரஜினிக்குப் பக்கத்தில் சிரஞ்சீவி அமர்ந்திருந்தார். அதேபோல லதா ரஜினிகாந்த் அருகில் நடிகர் என்.டி.ஆர். பாலகிருஷ்ணா அமர்ந்திருந்தார். இவர்கள் வருவதற்கு முன்பாகவே ஓ.பி.எஸ் வந்து அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்த என்.டி.ஆர். பாலகிருஷ்ணா, அருகில் போய் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். என்.டி.ஆர். பாலகிருஷ்ணா, மறைந்த என்டிஆரின் மகன், பாலய்யா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். ஓடும் ரயில்களையும், பாயும் லாரிகளையும், சீறும் பஸ்களையும் விரலால் தடுத்து நிறுத்தி தூக்கிப் போட்டு பந்தாடும் காட்சிகளுக்குப் பெயர் போனவர். இதை சமீபத்தில் ரஜினிகாந்த்தே ஆந்திராவில் நடந்த விழாவில் சிலாகித்துப் பேசியிருப்பார். அப்படிப்பட்ட பாலய்யாவே தன்னைத் தேடி வந்து பேசியதால் ஓ.பி.எஸ். ஹேப்பியாகி விட்டார்.


என்னதான் இருந்தாலும் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் ஓ.பி.எஸ். அவருக்கு முன்வரிசையில் இடம் கொடுத்திருக்கலாம். ஏன் கொடுக்காமல், ரஜினிகாந்த்துக்குப் பின்னால் அமர வைத்தனர் என்று தெரியவில்லை. ஒரு வேளை ஓபிஎஸ்ஸே போய் ரஜினிக்கு அருகில் இருக்கலாமே என்று அந்த சீட்டில் அமர்ந்திருந்தாரா என்றும் தெரியவில்லை.


சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் அவரது மகன் நர லோகேஷ், ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் ஆகியோரும் அமைச்சர்களாகியுள்ளனர். சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் மொத்தம் 25 பேர் இன்று பதவியேற்கிறார்கள். இந்த அரசில் பவன் கல்யாண் துணை முதல்வராக பதவி வகிக்கவுள்ளார். பவன் கல்யாண் கட்சியிலிருந்து 3 பேரும் (பவன் கல்யாண், நடேந்திலா மனோகர், கந்துலா துர்கேஷ்), பாஜகவிலிருந்து ஒருவரும் (சத்யகுமார் யாதவ்) அமைச்சர்களாகியுள்ளனர். 


தெலுங்கு தேசம் கட்சி அமைச்சர்களில் 17 பேர் புதுமுகங்கள் ஆவர். மற்றவர்கள் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள்.  அமைச்சரவையில் 3 பேர் பெண்கள் ஆவர்.  மூத்த தலைவர் முகம்மது பரூக் மட்டும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள முஸ்லீம் பிரதிநிதி ஆவார்.


ஜாதிகளின் பிரதிநிதித்துவத்தைப் பார்த்தால், ஓபிசி 8 பேர், 3 பேர் பட்டியலினத்தவர்கள், ஒருவர் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர். காப்பு, கம்மா சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தலா 4 பேரும், ரெட்டி சமூகத்திலிருந்து 3 பேரும், வைஸ்யா சமூகத்திலிருந்து ஒருவரும் அமைச்சர்களாகிறார்கள். சந்திரபாபு நாயுடு கம்மா வகுப்பைச் சேர்ந்தவர், பவன் கல்யாண் காப்பு சமூகத்தைச் சேர்ந்தவர்.


ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில்  தெலுங்கு தேசம், ஜன சேனா பாஜக கூட்டணி 164 இடங்களை வென்றது. அதேபோல லோக்சபாத தேர்தலில் மொத்தம் உள்ள 25 இடங்களில் 21 தொகுதிகளை இக்கூட்டணி வென்றது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!

news

எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு...தமிழகத்தில் வேகமெடுக்கும் அரசு பணிகள்

news

Iran-Israel War: மேற்கு ஆசியப் போர் எதிரொலி - சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு

news

10 ஏவுகணைகளை ஏவி அதிரடி காட்டிய கிம்மின் வடகொரியா.. கிலியில் அண்டை நாடுகள்!

news

வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு

news

மதுரை விமான நிலையம்.. திருத்தம்.. மதுரை சர்வதேச விமான நிலையம்.. மத்திய அரசு ஆணை!

news

மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு

news

NDA கூட்டணியில் தவெக விஜய்?.. நயினார் நாகேந்திரன் அளித்த அதிரடி விளக்கம்

news

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி - பிடிவாதம் காட்டும் இடதுசாரிகள்.. தேமுதிகவுக்கு அதிகம் தர எதிர்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்