சிரிக்க மறந்ததால் சிதைந்து போனோம்.. நம்மை நாமே செதுக்கி எழும்புவோம்.. சிரிக்கலாம் வாங்க தோழிகளே...!

May 30, 2025,04:38 PM IST

முனைவர் ராணி சக்கரவர்த்தி


பெண்ணுக்குச் சிரிப்பு ஒரு வரம். அவள் செழித்து வளர அதுவே உரம். பெண்கள் 13 வயது முதல் 22 வயது வரை அதிகம் சிரிக்கிறார்கள். தோழிகள் ஒன்று சேர்ந்து விட்டால் எதற்கு சிரிப்போம், எவ்வளவு நேரம் சிரிப்போம் என்றே தெரியாது. ஆனால், வயிறு வலிக்கச் சிரிப்போம். அதுவும் கல்லூரி நாட்களில் கவலை மறந்து சிரித்த அனுபவம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். பிரார்த்தனை நேரம், படிக்கும் நேரம், ஒத்திகை நேரம், சாப்பிடும் நேரம் என எல்லா நேரத்திலும் மறைத்து சிரித்து, ஒளித்து சிரித்தது, சத்தமாக சிரித்து மாட்டிக்கொண்டது என அனைத்து இன்பங்களும் பசுமரத்தானியாய் இதயத்தில் இருக்கும். 


சில பெண்கள் இருக்கும் இடம், எப்பொழுதும் கலகலப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். எனவே அவரைச் சுற்றி எப்போதும், சிரித்து மகிழ ஒரு கூட்டம் இருக்கும். சில பெண்கள் அருகில் இருப்பவர்களை அடித்து, கிள்ளி சிரிப்பார்கள். சிலருக்கு அதிகம் சிரித்தால் கண்ணில் கண்ணீர் கொட்டும். இப்படி பல அனுபவங்கள் நினைக்கும் போதே நெஞ்சம் இனிக்கிறது.


இளங்கலை முடித்து முதுகலை வந்தவுடன், ஒரு முதிர்ச்சி வந்தது போல் உணர்கிறோம். அறிவு விரிவதால், சிரிப்பு குறைகிறதா? இல்லை சிரிப்பு குறைவதால் அறிவு விரிவடைகிறதா? தெரியவில்லை. ஆனால் சிரிப்பும், குதூகலம் குறைந்து விடுகிறது. வேலைக்குச் சென்ற பின் மேலும் இறுகிவிடுகிறோம். அதிக சிரித்தால் வித்தியாசமாக பார்க்கப்படுவதாலோ என்னவோ, சிரிப்பு அரிதாகி விடுகிறது. திருமணத்திற்கு பிறகு முகத்தில் செயற்கையான புன்னகை இருக்கும். ஆனால் சிரிப்பு நம் பொறுப்புகளால் சிதைந்து போயிருக்கும். குழந்தை பிறப்பு, குடும்பச் சுமைகள், வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் சேர்த்து நாம் சிரிப்பை சூறையாடி வருகிறது. எனவே பெண்கள் நாம் சிரிக்க மறந்து விட்டோம்.




கிராமத்தில் பெண்கள் சிரிப்புக்குப் பஞ்சம் இருக்காது. குமரிகள் சேர்ந்தா, சிரிப்பும், கும்மாளமாகத்தான் இருக்கும் என பெருசுகள் பொறாமைப்படும் அளவு சிரிப்பார்கள். பள்ளிக்கூடத்தில் இருந்து வரும் போதும், பள்ளிக்கூடத்திற்கு போகும்போதும், தண்ணீர் எடுக்கச் சென்றாலும், களை எடுக்கச் சென்றாலும், திருவிழாக்களுக்குச் சென்றாலும் இளம்பெண்கள், தங்களுக்குள் பேசிப் பேசி சிரிப்பார்கள். இளம் பெண்களின் அழகுக்கு முன்னிலையான காரணம் அவர்களின் புன்னகையும், குதூகலமும் தான். திருமணத்திற்குப் பிறகு, சிரிக்க தடை ஓடத் தடை, குதிக்கத் தடை, தோழிகளைச் சந்திக்கத் தடை, சத்தமாக பேசத் தடை என இந்த சமூகம் பெண்களுக்குப் பல தடைகளை விதிப்பது ஒருபுறம் என்றாலும், பல பெண்கள் திருமணமான பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பொது கற்பிதத்தினாலும், உறை நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.


தன்னுடைய சிரிப்போடு சேர்ந்துத் தன்னையும் தொலைத்து விட்டதாக கருதும் பெண்கள், அதற்குக் காரணமான, திருமண உறவுகள் மீதும், இந்தச் சமூகத்தின் மீதும் கோபம் அடைவதால், அது குடும்பப் பிரச்சினைகளாக வெடிக்கிறது. குடும்பப் பிரச்சினை, பெண்களின் மன நிம்மதியைக் குலைத்து விடுவதால், தங்களின் குழந்தைகளைச் சரியாக வளர்க்கத் தவறிவிடுகிறார்கள். இது மேலும் பிரச்சினைகளை உருவாக்கி, பெண்களின் உடல் மற்றும் மனநலனைச் சீர்கெடுத்து விடுகிறது.


சிரிப்பு என்பது பல உடல் மற்றும் மன நோய்களுக்கு அருமருந்து. ஒருவர் வாய்விட்டு சிரிக்கும்போது, அதிகப்படியான ஆக்சிஜன் உடலுக்குக் கிடைப்பதால் இதயம், நுரையீரல் மற்றும் தசைகள் புத்துணர்ச்சி பெறுகிறது. மேலும் புளோரிடா மாகாணத்தின் Lynn பல்கலைக்கழகத்தின் Dr.Matt Bellance என்பவரின் ஆராய்ச்சியின்படி, ஒருவர் சிரிக்கும் போது அவரின் மூளையில் டோபோமின் என்ற நொதிதிரவம் அதிகமாக சுரக்கிறது. அதனால் மூளை புத்துணர்ச்சி அடைவதோடு, உணர்ச்சி மிகுந்த நிலையை ஏற்படுகிறது. அத்துடன் உடலில் வலிகளைக் குறைக்கிறது என்று நிரூபித்துள்ளார்.


சிரிப்பு நம்மை மனச்சோர்விலிருந்து காக்கிறது மனவலிமையை, பிரச்சனைகளைக் கையாளும் திறனை அதிகரிக்கிறது. மனபதட்டத்தை, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே தான் சிரிப்பை மருந்தாக்கும் Laughing Therapy அதிகமாக வந்தாலும், அதில் பெண்கள் கலந்து கொள்வது குறைவாகவே உள்ளது.


பெண்கள் தங்கள் சிரிப்பைப் புதுப்பிக்க வேண்டும். நமக்காக, நம் உடல் நலனுக்காக, நம் மகிழ்ச்சிக்காக சிரிக்கத் துவங்குவோம். தோழிகள் கூடி பயணித்து, கதை சொல்லி, கைதட்டிச் சிரிப்போம். சிரிக்க வைக்கும் தோழிகளை, சிரிக்க கிடைக்கும் தருணங்களைத் தேடிப்போவோம். வயதை மறந்து, வயதை குறைக்கச் சிரிப்போம். ஆடி, பாடி மகிழ்வோம். நமக்கு நாமே கொடுக்கும் மிகச் சிறந்த பரிசு சிரிப்பு. சிரிக்க மறந்ததால் சிதைந்து போனோம். சிரிப்பைக் கொண்டு, நம்மை நாமே செதுக்கி எழும்புவோம் வாங்க சிரிக்கலாம் தோழிகளே...!


கட்டுரை: முனைவர் ராணி சக்கரவர்த்தி எழுதிய மனதோடு பேசுவோம் தோழி நூலிலிருந்து.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் உயிரோடு இருக்க கூடாது... ராமதாஸ் -அன்புமணி மோதலால் மனஉளைச்சல்... ஜி.கே.மணி வேதனை!

news

கோடை கால பருவ மழை... இயல்பைவிட 129% அதிகம்... சென்னை வானிலை மையம் தகவல்!

news

தற்போது பரவும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது... பதற்றம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

news

RIP Rajesh: தனக்குத் தானே கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷின் உடல் அடக்கம்!

news

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் நியமனத்தில் சமூக அநீதியை அனுமதிக்க முடியாது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 16 கி.மீட்டருக்கு ரோடு ஷோ!

news

பரவுகிறது கொரோனா.. கேரளாவில்தான் அதிகம்.. வெளியில் செல்லும்போது மாஸ்க் போடுவது நல்லது!

news

வாரத்தின் கடைசி நாளான இன்று... எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்