சென்னை: நடிகை விஜயலட்சுமி கொடுத்த திருமண மோசடி, கட்டாய கருக்கலைப்பு புகாரில் நேரில் ஆஜராக வேண்டும் என சீமானுக்கு போலீசார் 2-வது முறையாக சம்மனை நேரில் கொடுத்தனர். ஆனால் சீமான் தரப்பு சம்மனை வாங்க மறுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
2008ம் ஆண்டு மதுரையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தம்மை திருமணம் செய்து கொண்டார். 3 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பின் சீமான் தன்னை ஏமாற்றிவிட்டார் என்றார். என்று 2011ம் ஆண்டு சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை போலீசில் புகார் அளித்தார். அப்போது சீமானும், - விஜயலட்சுமியும் சமாதானமான நிலையில் புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றார்.
பின்னர் சீமான் மீது பல்வேறு புகார்களை வீடியோக்களின் மூலம் கூறி வந்தார் விஜயலட்சுமி. சென்னையில் தங்கி இருந்த போது தற்கொலைக்கு விஜயலட்சுமி முயன்றதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் கடந்த மாதம் மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி இதுகுறித்து மீண்டும் பரபரப்பு புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமியிடம் 8 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சீமான் 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்தார் எனவும் விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இந்நிலையில் நடிகை விஜயலட்சுமிக்கு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இதனையடுத்து சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை வளசரவாக்கம் போலீசார் முதல் சம்மன் அனுப்பினர். அப்போது, கட்சிப் பணிகள் அதிகமாக இருப்பதால் தமக்கு ஆஜராக நேரம் இல்லை என கூறியிருந்தார். பின்னர் சீமான் தரப்பில் வழக்கறிஞர்கள் 6 பேர் ஆஜராகி, அவர் கொடுத்த கடிதங்களை வழங்கினர். அதில், தம் மீதான புகார்கள் குறித்து விளக்கம் கொடுத்தால் ஆஜராக தயாராக உள்ளதாக சீமான் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு 2வது முறையாக சம்மன் கொடுக்க போலீசார் சென்றனர். அப்போது சீமான் தரப்பில் சம்மனை வாங்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் என வீடியோ பதிவின் வாயிலாக எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
{{comments.comment}}