Porselvi Rajan Tamil Poem: வெயிலோடு விளையாடி!

Apr 18, 2026,10:28 AM IST

- கவித்தாரகை பொற்செல்வி ராஜன்     

      

கோடைக் காலமே கொளுத்தும் வானமே      

சூடான கதிர்கள் சுற்றி வளைக்குமே


இருந்தும் மணலில் மகிழ்வாய் ஆடுவோமே      

மிதிவண்டி ஏறி சாலையில் சுற்றுவோமே

      

ஆலமரத்தடியில் ஆசையாய் கூட்டாஞ்சோறு சமைப்போமே

ஆலமர விழுதிலே உற்சாகமாய் ஊஞ்சலாடுவோமே


      


காகிதக் கத்தியிலே மிடுக்காய்ச் சண்டையிடுவோமே

மணல்வீடு மாலையில் ஆளுக்கொன்றாய் கட்டுவோமே

      

குடியேற முடியாவிட்டாலும் குறையில்லாமல் குதூகலிப்போமே

வெப்பக் காலத்தில் தெப்பத்தில் குதிப்போமே

      

கிணற்று நீரில் குட்டிக்கரணம் போடுவோமே

இன்னிசை கீதமே இளவேனிற் தென்றலே    

      

(கவித்துளி வழங்கிய சிறப்புக் கவிதைப் போட்டி முதலும் முடிவும்.. அதில் கலந்து கொண்ட கவிதை. கவிஞர், கவித்தாரகை பொற்செல்வி ராஜன், கோவையைச் சேர்ந்தவர்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்