சமத்துவ சலனத்தை உண்டாக்கி.. கல்வியைப் பெண்களிடம் கொண்டு சேர்த்த.. சாவித்திரி பாய் புலே!

Jan 03, 2026,12:16 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc,B.Ed


ஆசிரியர் தினம் என்றால் நம் நினைவிற்கு வருவது டாக்டர் ராதாகிருஷ்ணன். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார் என்று தெரியுமா?


சமூக சீர்திருத்தவாதி மற்றும்  ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்ட இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்பட்ட சாவித்திரிபாய் புலே அவர்களை பற்றி தெரிந்து கொள்வோம் .


சரியாக 178 ஆண்டுகளுக்கு முந்தைய, இந்தியச் சமூகம் அது. ‘ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை’ என்று எண்ணப்பட்ட காலம். அப்போது, சாதி இந்து ஆண்கள் மட்டுமே பள்ளிக்கூடம் போய்ப் படிக்க முடியும். பெண்களின் நிலையோ படுமோசமாக இருந்தது.


ஒரு பெண்ணாக இன்று பொறியாளராகவோ, மருத்துவராகவோ, ஆசிரியராகவோ ஏதோ ஒரு துறையில் படித்து முன்னுக்கு வந்தவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒருவருக்கு நிச்சயமாகக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அக்காலகட்டத்தில் இந்தியச் சமூகத்தில் குலக்கல்வி முறையே கல்வியாக இருந்தது. அது மூடநம்பிக்கையும் பிற்போக்குத்தனங்களையும் உயர்த்திப் பிடிக்கும் கல்வி முறையைக் கொண்டதாக இருந்தது.


அப்படியிருக்கும் கல்விமுறையில்கூட உயர்சாதி ஆண்கள் மட்டுமே பயில முடியும். பெண்களின் நிலையோ நரபலிகள், உடன்கட்டை ஏறுதல், கைம்பெண் மறுமண மறுப்பு என்ற ஆதிக்கங்களால் பெண்கல்வி மற்றும் பெண்ணுரிமை மறுக்கப்பட்டுவந்தன. அந்த ஆதிக்க மனநிலைக்கு எதிராக அறிவென்னும் கல்லை ஓங்கி ஒருவர் எறிந்தார். அது சமத்துவ சலனங்களை உண்டாக்கி, கல்வியைப் பெண்களிடமும் கொண்டு சேர்த்தது. அந்த ஒருவர்தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான 'சாவித்திரி பாய் பூலே.'




சாவித்திரிபாய் புலே மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் எனும் சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் ஜனவரி 3,1831-ம் ஆண்டு பிறந்தார். கல்வி வாய்ப்பு இல்லாத வகுப்பைச் சார்ந்தவர். அக்கால வழக்கப்படி தனது 9 வயதிலேயே ஜோதிராவ் புலேவுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறார். ஜோதிராவ் புலே ஒரு சமூகப் போராளி. அக்காலத்தில் உயர்சாதியினருக்கு மட்டுமே கல்வி வழங்கப்பட்டது. அதை எதிர்த்துப் போராடியவர் புலே. அவரே சாவித்திரி பாய்க்கு நான்கு ஆண்டுகள் கல்வி போதித்தார். அவர் கற்றுத்தேர்ந்த பின், இருவரும் இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியைக் கொடுக்கப் புறப்படுகிறார்கள்.


1847ல் ஒடுக்கப்பட்ட மற்றும் விதவைப் பெண்களுக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினர். அன்றைய காலகட்டத்தில் குழந்தைத் திருமணம் மிகுந்து இருந்ததால் இளம் வயதி லேயே விதவையான பெண்கள் பலர் இருந்தார்கள். பின் 1848-ம் ஆண்டு இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, பெண் குழந்தைகளுக்கான பள்ளியை பூனேவில் தொடங்குகின்றனர். ஒன்பது குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட அப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் சாவித்திரி பாய் புலே. அன்றைய காலகட்டத்தில் கல்வி பயிற்றுவித்த பெண் அவரே. ஆம், அவர்தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்.


 அதற்குப்பின் 1849-ல் ஒரு பள்ளியைத் தொடங்குகின்றனர் அன்றைய இந்தியாவில் அனைத்து மக்களுக்குமான அதாவது பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தலித்துகள், பெண்கள் என அனைவருக்குமாக இயங்கிய ஒரே பள்ளி அதுதான். தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு, சாவித்திரி பாய் புலே கல்வி வழங்கியதை அன்றைய பழைமைவாதிகள், மேல் சாதியினர் விரும்பவில்லை. எனவே சாவித்திரி செல்லும் வழி எங்கும் கற்களையும் சாணத்தையும் மலத்தை யும் அவர் மீது வீசினார்கள். இதை, கணவர் ஜோதிராவிடம் கூறி வருந்த அவர் பழைய ஆடைகளை அணிந்து கொண்டு போ! பின் அங்குச் சென்று நல்ல உடைகளை உடுத்திக்கொள்' என்றார் அதனையே  சாவித்திரி பாய் புலே பின்பற்றினார்.


அக்கால கட்டத்தில் தீண்டாமையின் கொடுமை அதிகம் அதனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தண்ணீர் மறுக்கப்பட்டது. ஆகை யினால் அவர்கள் வெகுதூரம் சென்று தண்ணீர் சேகரிக்க வேண்டிய சூழல் இருப்பதைக் கண்டு, தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். குழந்தைத் திருமணத்தால் விதவையான பெண்களுக்கு தலை முடியை மழித்து விடும் கொடுமையான வழக்கம் நடைமுறையில் இருந்தது. விதவைகளுக்கு தலை மழிக்கமாட்டோம் என்று மறுக்கும் அளவுக்குத் தீவிரமாகப் போராடி வெற்றி பெற்றார்கள் புலே தம்பதி.


18-ம் நூற்றாண்டிலேயே விதவைகளுக்கு மறுமணம் செய்துவைத்தார். சாவித்திரிபாய் புலே நல்ல கவிஞரும் ஆவார். மராத்தியத்தில் நவீன கவிதைப் போக்கு இவரில் கவிதைகளிலிருந்தே தொடங்குகின்றது. டெல்லி பல்கலைக்கழகத்தில் உலகளாவிய ஆய்வுகள் பற்றி ஆராயும் பணி புரிந்துகொண்டிருக்கும் பேராசிரியர் டாம் உல்ப் என்பவர் ஆயிகோஸ் என்ற உலகப் பத்திரிகையில், சாவித்திரிபாய் புலேவை இந்தியாவின் நவீன கல்வி மற்றும் பெண் கல்வியின் அன்னை' என்று குறிப்பிடுகிறார்.


1852ல் இவர் தொடங்கி வைத்த `மஹிளா சேவா மண்டல்' (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புஉணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடு பட்டது.


மகாராஷ்டிராவை பிளேக் நோய் தாக்கியதில் பல மக்கள் நோயுற்றனர். ஆங்கிலேய அரசு சிறப்புச் சட்டம் போட்டு நோயுற்ற மக்களை ஒதுக்கி வைத்து பிறரைப் பாதுகாத்தது.  அயல்நாட்டில் மருத்துவம் பயின்றுகொண்டிருந்த தன் மகனை இந்தியா அழைத்து வந்து மருத்துவ மனை அமைத்துக் கொடுத்தார் சாவித்திரி பாய் புலே. நோயால் அவதிப்பட்டவர்களைத் தோளில் சுமந்து வந்து தன் மகனின் மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க உதவியவர் புலே. ஒருமுறை பாண்டுரங்கன் என்கிற 10 வயதுச் சிறுவனை தூக்கி வரும்போது நோய்த்தொற்று பரவியது புலேவுக்கு. பாண்டுரங்கன் பிழைத்துக்கொள்ள நோயால் மரித்துபோனார் புலே. மரித்துப்போன கணவரை எமனிடமிருந்து மீட்கவில்லை இந்த சாவித்திரி. பதிலாக... அவரின் கொள்கை எனும் நெடிய சங்கிலியை இறுக்கப் பிடித்து தன் வாழ்நாள் முழுவதும் இழுத்துச் சென்றவர். அதற்காகவே உயிர் துறந்தவர்.


இத்தகைய மாமனிதர் சாவித்திரி பாய் புலேயின் பிறந்த நாளான  ஜனவரி 3ம் தேதியை நாம் சிறப்பாக கொண்டாடி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். சிறப்பு வாய்ந்த இவர் குறித்த தகவலை பாடப்புத்தகத்தில் கட்டாயம் சேர்க்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

TAPS: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கொடுத்த ஹேப்பி நியூஸ்.. அறிக்கையின் முழு விவரம்!

news

வெனிசுலா அதிபர் சிறைபிடிக்கப்பட்டு, நாடு கடத்தல்...டிரெம்ப் அறிவிப்பு

news

வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

news

திமுக தேர்தல் அறிக்கை: மொபைல் செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

அதிகரிக்கும் குடும்பப் பஞ்சாயத்துகள்.. விரிவடையுமா டிஎன்ஏ டெஸ்ட் கோரிக்கைகள்?

news

காவல்துறையினர் மரியாதை, புன்னகை, அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

news

மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல்? நிர்மலா சீதாராமன் படைக்கப்போகும் புதிய சாதனை

news

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லத் தயாரா?... 150 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

news

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்...முதல்வர் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்