டில்லி : தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு ‘இலவசங்களை’ அறிவிப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
தேர்தல் சமயங்களில் வாக்காளர்களை கவர்ந்து ஓட்டுக்களை பெறுவதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் இலவசங்கள் அளிப்பதாக பல தேர்தல் வாக்குறுதிகளை அறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. ஆனால் இது மக்களை ஏமாற்றும் வேலை என பலரும் பல காலமாக எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றன. இந்நிலையில், தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களைக் கவர்வதற்காக அரசியல் கட்சிகள் பொதுப் பணத்திலிருந்து பகுத்தறிவற்ற இலவசங்களை அறிவிப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் மிகவும் முக்கியமானது என்று கருதி, இதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளச் சம்மதித்துள்ளது. இலவசங்களை அறிவிப்பது ஜனநாயக மாண்புகளைச் சிதைப்பதாகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இத்தகைய அறிவிப்புகள் தேர்தலின் நேர்மையைப் பாதிப்பதோடு, அரசு கஜானாவிற்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உரிய வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என்றும், விதிகளை மீறும் கட்சிகளின் தேர்தல் சின்னங்களை முடக்குவது அல்லது அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்க வாய்ப்புள்ளது.
2026ம் ஆண்டில் தமிழ்நாடு, ஒடிசா, மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. இது தவிர காலியாக உள்ள எம்.பி., எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் பலவும் தயாராகி வரும் நிலையில் இலவச அறிவிப்புக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பொது நல மனு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்தால் அது அரசியல் கட்சிகளுக்கு பெரும் நெருக்கடியை தரவும் வாய்ப்புள்ளது.
{{comments.comment}}