இலக்கு ஒன்றுதான்.. இனத்தின் விடுதலை.. இனம் ஒன்றாவோம்.. இலக்கை வென்றாவோம்.. சீமான் உற்சாகம்!

Jun 09, 2024,10:11 AM IST

சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக்கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல் என்றும் அவர் வர்ணித்துள்ளார்.


நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் இரு கட்சிகளுக்கு புதிய அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது. அதுதான் மாநிலக் கட்சி என்ற அந்தஸ்து. அந்த பெருமையைப் பெற்ற கட்சிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி. இரு கட்சிகளுமே நீண்ட காலமாக அரசியல் களத்தில் விடாமல் களமாடி வருபவை. தமிழர்களுக்கான உரிமைகளுக்காக விடாமல் குரல் கொடுக்கும் வீரியமிக்க இரு ஆளுமைகளைத் தலைவர்களாகக் கொண்ட கட்சிகள்.




இந்த இரு கட்சிகளுக்கும் இந்த தேர்தல் புதிய பெருமையைத் தேடிக் கொண்டு வந்துள்ளது. நாம் தமிழர் கட்சி தோற்றுவிக்கப்பட்டது முதலே தனியாகவே தேர்தல்களை சந்தித்து வருகிறது. எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெறத் தவறினாலும் கூட ஒவ்வொரு தேர்தலிலும் மக்களின் மனதை கொள்ளை கொள்ள இது தவறியதில்லை. தொடர்ந்து தேர்தல்களில் துணிச்சலுடன் தனியாக களமாடி வரும் நாம் தமிழர் கட்சி தனது முதல் பெரிய அங்கீகாரத்தை தற்போது பெற்றுள்ளது.


மைக் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு 8.2 சதவீத வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையத்திடமிருந்து பெறுகிறது நாம் தமிழர் கட்சி. இதுதொடர்பாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மகிழ்ச்சியும், உற்சாகமும் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இத்தேர்தலில் வெற்றி எனும் இலக்கை அடையாவிட்டாலும், கணிசமான வாக்குகளைப் பெற்று, மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது.


தமிழ்த்தேசியம் எனும் உயரிய தத்துவ முழக்கத்தை எம் முன்னோர்களும், மூத்தோர்களும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே தூக்கிச் சுமந்தபோதும், அக்கருத்தியல் முழக்கம் வெகுமக்கள் வடிவம் பெறாமலேயே இருந்தது. அந்தப் போதாமையையும், குறைபாட்டையும் முற்றிலும் போக்கி, தமிழ்த்தேசியத்தை வெகுமக்கள் அரசியலாக்கி,  தேர்தலிலே களம் கண்டது நாம் தமிழர் கட்சி.




2016ஆம் ஆண்டு முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, எட்டே ஆண்டுகளில் மாநிலக் கட்சியாகப் பரிணமித்திருப்பது தமிழினஅரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல்! சின்னம் பறிப்பு, அதிகார முறைகேடு, அரசியல் நெருக்கடி எனப் பல அடக்கு முறைகளைத் தாண்டியும், சாதி, மதம், மது, பணம் எனப் புரையோடிப்போன சமூகத்தீங்குகளைக் கடந்தும் நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கும் வாக்குகளென்பது பெரும் சனநாயக மறுமலர்ச்சியாகும்.


இத்தேர்தலில் பெற்ற மாநிலக்கட்சி அங்கீகாரத்தை ஊக்கமாகக் கொண்டு, 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க உறுதியேற்கிறோம்.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3,600,088 மதிப்புமிக்க வாக்குகளைத் தந்து, நாம் தமிழர் கட்சியைப் பெரும் அரசியல் ஆற்றலாக உருவெடுக்கச் செய்த தாய்த்தமிழ்ச் சொந்தங்கள், போற்றுதற்குரிய பெருமக்கள், வேட்பாளர்களாகக் களத்தில் நின்ற எம் உடன்பிறந்தார்கள், எல்லாவுமாகத் துணைநின்ற அன்பிற்கினிய உறவுகள், உயிரைக் கொடுத்து உழைத்த உயிருக்கினிய தம்பி, தங்கைகள் என அனைவருக்கும் என்னுடைய புரட்சிகரமான வாழ்த்துகளையும், உளப்பூர்வமான அன்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு

news

கூட்டணிக்கு யாரும் வரல...தேர்தல் திட்டம் இதுவா...என்ன செய்ய போகிறார் விஜய்?

news

இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுங்க...நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

news

ஜனநாயகன் படத்தை 10ம் தேதி ஏன் தள்ளி வைக்கக் கூடாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

news

காணாமல் போன வைர மாலை (ஒரு பக்க சிறுகதை)

news

தமிழகத்தில் வச்சு செய்யப்போகும் கனமழை... எப்போ, எங்கெல்லாம் என்று தெரியுமா?

news

திமுக இனியாவது நீதிமன்ற தீர்ப்பினை மதிக்க வேண்டும்: அண்ணாலை

news

பொம்மையம்மா.. பொம்மை!

news

நான் அப்படியே ஸ்வீட் ஷாக் ஆயிட்டேன்.. I got stunned!

அதிகம் பார்க்கும் செய்திகள்