Assembly Protem Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்!

May 10, 2026,08:32 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதியிலிருந்து தவெக சார்பில் வெற்றி பெற்றுள்ள எம்.வி.கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


தற்காலிக சபாநாயகர் எம்.வி.கருப்பையா, நாளை காலை 9.30 மணிக்கு கூடும் சட்டசபைக் கூட்டத்தின்போது புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். 



தமிழக வெற்றி கழக வேட்பாளராக சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்ட எம் வி கருப்பையா அங்கு 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் அதிமுகவிலிருந்து தவெகவுக்கு வந்தவர் ஆவார்.


அதிமுக சார்பில் கடந்த 2011 சட்டசபைத் தேர்தலின்போது போட்டியிட்டு சட்டசபைக்கு முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு அங்கு சீட் தரப்படாத நிலையில் தவெகவில் இணைந்து சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தற்போது வெற்றி பெற்று, தற்காலிக சபாநாயகர் பதவியையும் எட்டியுள்ளார்.


நாளை சட்டசபையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு முடிந்த பின்னர், வருகிற 12ம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும். இதில் தவெக வேட்பாளர்கள் புதிய சபாநாயகர், துணை சபாநாயகராக தேர்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்