மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசு... முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் சாடல்

Feb 02, 2026,11:20 AM IST

சென்னை : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த 2026-27ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கை, தமிழகத்திற்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையிலும், தமிழகத்தின் கோரிக்கைகள் செவிமடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


2026-2027ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இதில் தமிழகத்தை குறிப்பிட்டு சில திட்டங்களை அவர் அறிவித்தார். இருந்தாலும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்ட, மாநிலங்களுக்கான வரி பகிர்வு 41 சதவீதத்தில் இருந்து, 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. மாநிலங்களுக்கான வரி பகிர்வு 41 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும் என நிதியமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டசாலின் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.


அவர் கூறுகையில், இந்த பட்ஜெட் ஏழை மக்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் விளிம்புநிலை மக்கள் என எந்தத் தரப்பினருக்கும் பலனளிக்கும் வகையில் அமையவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை இது ஒரு "பெரிய ஏமாற்றம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை 41 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களின் நீண்டகாலக் கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.




16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய வரிப்பகிர்வு 4.097 சதவீதமாகவே நீடிக்கிறது. இதனால் ஆண்டுக்கு சுமார் ரூ.5,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்வாலா திட்டத்திற்கு கடந்த பட்ஜெட்டில் ரூ.67,000 கோடியாக இருந்த ஒதுக்கீடு, இந்த முறை ரூ.17,000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது அத்திட்டத்தைச் சீர்குலைக்கும் முயற்சி என அவர் சாடியுள்ளார்.


பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு கடந்த ஆண்டு ரூ.10,831 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது வெறும் ரூ.526 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது அந்தத் திட்டம் தோல்வியடைந்துவிட்டதைக் காட்டுகிறது. சமக்ர சிக்ஷா (Samagra Shiksha) திட்டத்தின் கீழ் வர வேண்டிய ரூ.3,548 கோடி மற்றும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வர வேண்டிய ரூ.3,112 கோடி நிலுவைத் தொகையை விடுவிப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மும்மொழி கொள்கையை ஏற்காததால் கல்விக்கான நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.


தமிழகத்திற்கெனப் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது, மத்திய அரசின் "மாற்றாந்தாய் மனப்பான்மையை" வெளிப்படுத்துவதாக முதல்வர் விமர்சித்துள்ளார். வழக்கமாக பட்ஜெட் உரையில் இடம்பெறும் "திருக்குறள்" கூட இந்த முறை இடம்பெறவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தேர்தல் நெருங்கும் வேளையிலும் கூட தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்துள்ளது என முதல்வர் குற்றம்சாட்டி உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்