Rain rain everywhere.. அடித்து நொறுக்கும் கன மழை.. அணைகள், ஏரிகளுக்கு அபரிமிதமான நீர்வரத்து!

Dec 13, 2024,10:50 AM IST

சென்னை: வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அணைகள், ஏரிகளின் நீர் இருப்பும் அதிகரித்து வருகிறது.


வங்கக் கடலில் நிலவிவரும் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக டெல்டா மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்கள், மற்றும் தென் மாவட்டங்கள் என தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அங்குள்ள சிவன்மலை, குறிஞ்சி தெரு, உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.


மதுரை மழை: 




மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த புதன்கிழமை இரவு தொடங்கிய மழை இரவு பகலாக தற்போது வரை விட்டுவிட்டு மிதமான மழையாக பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத  சூழ்நிலை உருவாகியுள்ளது. 


ஆங்காங்கே மழை நீரும் சூழ்ந்துள்ளதால் நேற்று குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. பின்னர் இரவு முதல் மீண்டும் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் இன்று மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


அதேபோல் தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, சங்கரன்கோவில், ஆயக்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக 40 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மீட்புப் பணிகளுக்காக அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய மீட்டுக் குழுவினர் ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர அவசரகால கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகின்றனர்.


குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு:




மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள குளம் உடைப்பால் செங்கோட்டையில் இருந்து கேரளா செல்லும் சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு கேரளாவுக்கு சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக 40 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. 

 

டெல்டா மாவட்டங்கள் கனமழை:


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வைத்தீஸ்வரன்நாதர் கோவில்,கொள்ளிடம், பூம்புகார் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், தர்மபுரி, கடலூர், நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக கனமழை வெளுத்து வாங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 18 மணி நேரத்தில் 22 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. 


தேனி மழை:


தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரமாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்கு தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் போடி மெட்டுப்பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக அங்குள்ள மலைப்பாதைகளில் ராட்சத பாறைகள் உருண்டு போக்குவரத்துக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.அதே வேளையில் சாலைகளும் சேதமாகியுள்ளன.


செம்பரம்பாக்கம் ஏரி: 


அதே நேரத்தில் சென்னையில் பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை எட்டிய நிலையில் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புக்குள் மழைநீர் சூழ்ந்து மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். 


ஏரியின் மொத்த கொள்ளளவான 24 கன அடியில், தற்போது 23.29 கனடியாக நீர்மட்டம்  உயர்ந்ததால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது‌. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளும் மழை நீர் புகுந்தது. தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில், தற்போது ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக வருவதால் விநாடிக்கு 4000 கன அடி நீராக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பால் அடையாறு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் செம்பரம்பாக்கம் ஏரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


மேட்டூர் அணை: 


வங்கக்கடலில் நிலவிவரம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணிக்கு நீர்வரத்து 4727 கன அடியிலிருந்து 6,384 கனடியாக அதிகரித்துள்ளது. காலை 8:00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.31  கன அடியாக உயர்ந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக ஆயிரம் கன அடி தண்ணீரும் கிழக்கு மேற்கு கால்வாய்க்கு 300 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.


பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு


இதற்கிடையே,  தொடரும் கன மழை காரணமாக தென் மாவட்டங்கள் பலவற்றுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதில், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், சேலம், சிவகங்கை, மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம்,  தேனி, கரூர், திருவாரூர், தருமபுரி, நாமக்கல், நாகப்பட்டனம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.


திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளோடு சேர்த்து கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்

news

சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

news

ஐவகை நிலங்களின் பெயரில்.. மாணவர் தலைவர், அமைச்சரைத் தேர்வு செய்யும்.. மகிழ் முற்றம்

news

எழுத்து சொற்களின் தொகுப்பல்ல.. மனித வாழ்வை மாற்றும் சக்தி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!

news

இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!

news

சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!

news

நீலத்திரைக்கடலோரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்