தேனி: ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். பலர் அதை தாங்களாக உணர்கிறார்கள். சிலருக்கு யாராவது அதை உணர வைத்து தூண்டுகோலாக மாறி தூக்கி விடுவார்கள். அப்படித்தான் நம்ம தம்பி ஹரிஸும்.
தித்திக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் நம்ம ஹரிஸ். 13 வயதாகிறது. அங்குள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். செஸ்ஸில் கில்லியாக இருக்கிறார். எந்தப் போட்டிக்குப் போனாலும் ஜெயிக்காமல் வருவதில்லை. வைத்திருக்கும் சான்றிதழ்கள், பரிசுகளைக் குவித்தால் கிட்டத்தட்ட குட்டி மலை போல வரும் போல. அந்த அளவுக்கு வென்று கொண்டிருக்கிறார்.
எப்படி ராஜா இப்படி கலக்குற இந்த வயதிலேயே என்று ஆச்சரியத்துடன் கேட்டபோது, தென் மேற்குப் பருவக் காற்று போல ஜிலுஜிலுவென நம்மிடம் ஹரிஸ் கொட்டியது.. அவரது வார்த்தைகளிலேயே..

எனது பெயர் அ. ஹரிஸ். நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். எனது பள்ளியின் பெயர் வேலம்மாள் போதி கேம்பஸ், தேனி.
நான் முதன்முதலாக எனது பொழுதுபோக்கிற்காக கொரோனா நேரத்தில் என்னுடைய மாமாவிடம் சதுரங்கப் போட்டி கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அவர்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார். பள்ளியில் பயிற்சி பெற ஆரம்பித்தேன். முதலில் படித்த பள்ளியின் பெயர் பூர்ண வித்ய பவன் தேனி. அங்கிருந்து தான் என்னுடைய முதல் போட்டியில் பங்கேற்றேன்.
தேனி வீரபாண்டி க்கு சென்று விளையாடினேன். அங்கு ஐந்திற்கு மூன்று என்ற புள்ளி விகிதத்தில் சான்றிதழ் மட்டும் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினேன். அதன் பிறகு ஒவ்வொரு இடத்திலும் மூன்று என்ற விகிதத்தில் சான்றிதழ் பெற்று வந்தேன். பிறகுதான் இதில் நன்றாக பயிற்சி எடுக்க வேண்டும் என்று தேனியில் உள்ள கிராண்ட் மாஸ்டர் சதுரங்க பயிற்சி வகுப்பில் எனது மாமா சேர்த்துவிட்டார். அதற்கு முன்பு வரை நான் கற்றுக் கொண்டதை வைத்து மட்டும்தான் விளையாடினேன். அதன் பிறகும் தோல்வியை சந்தித்து பிறகு தான் வெற்றி பெற ஆரம்பித்தேன்.

ஐந்திற்கு மூன்று வாங்கிக் கொண்டிருந்த நிலைமையில் இப்பொழுது ஐந்துக்கு ஐந்து பெற்று முதலிடம் பெற்றுள்ளேன். நான் அனைத்து விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவன்தான். ஆனால் ரொம்பப் பிடித்தது செஸ் தான். அதைப் புரிந்து கொண்ட அம்மாவும் எனது மாமாவும் என்னை ஊக்குவித்தார்கள். அதிலிருந்து நான் நன்றாக பயிற்சி எடுத்துக்கொண்டேன். வெற்றி பெறவும் ஆரம்பித்தேன்.
மதுரையில் ஒரு போட்டியில் ஏழுக்கு ஐந்து என்ற விகிதத்தில் 14வது பரிசு பெற்றேன். இதன் பிறகு சிவகாசியில் இன்டர்நேஷனல் புள்ளி பட்டியல் போட்டியில் பங்கேற்க சென்றேன். அங்கு தோல்விதான் அடைந்தேன், மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் அதுதான் நான் முதன் முதலாக விளையாடும் புள்ளி பட்டியல் போட்டி. ஆகையால் அம்மாவும் மாமாவும் இதில் பங்கேற்பதே மிகப்பெரிய விஷயம், உன்னால் முடியும். அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி ஊக்குவித்தார்கள்.
அதன் பிறகு இரண்டு போட்டியில் கலந்து கொள்ளவில்லை. பிறகு தான் அம்மாவும் மாமாவும் விளையாடு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். அப்போதுதான் மாவட்ட அளவில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் விளையாடி ஐந்திற்கு ஐந்து என்ற விகிதத்தில் முதல் பரிசை பெற்றேன். என்னை ஊக்குவித்த எனது குடும்பத்தாருக்கும் பயிற்சி அளித்த எனது மாஸ்டர்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பல சாதனைகளை புரிய நான் ஆசைப்படுகிறேன் என்று கூறி நிறுத்தினார் ஹரிஸ்.

சரி இந்த விளையாட்டு அனுபவத்திலிருந்து நீ உணர்ந்துள்ள பாடம் என்ன தம்பி என்று கேட்டோம்.. அதற்கு ஹரிஸ் சற்றும் தயக்கமில்லாமல், தோல்வியை கண்டாலும் துவண்டு விடாமல் சாதித்து காட்ட வேண்டும். இதுதான் நான் கற்றுக் கொண்டது என்றார் பளிச்சென.
ஹரிஸுக்கு மட்டுமல்ல மக்களே.. எல்லோருக்குமே பொருந்தக் கூடியதுதான் இது இல்லையா.. ஹரிஸை வாழ்த்துவோம்.. அவரைப் போல சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவரையும் ஊக்குவிப்போம்.
ஹரிஸ் விளையாட்டில் மட்டுமல்ல பிற துறைகளிலும் ஆர்வம் மிக்கவராக இருக்கிறார். ரத்னா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளரிர்கள் பன்னாட்டு மையத்தின் சார்பில் நடத்தப்படும் திருக்குறள் வினாடி விடை நிகழ்வில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றுள்ளார். அதேபோல எண் சூத்திரம் என்ற 8 மணி நேரம் வாய்ப்பாடு எழுதும் உலக சாதனை நிகழ்விலும் ஹரிஸ் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றுள்ளாராம்.
வானிலை கொடுத்த அப்டேட்.. இன்றும், நாளையும் எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?
மதுரையின் வளர்ச்சிக்கு போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெரிவோம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு!
அரசியல் கட்சிகளுக்கான SOP ரெடி.. உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தமிழ்நாடு அரசு!
திமுக அரசு ₹4,000 கோடியில் ஊழல் செய்வதற்கு மட்டுமே, விதிகளை மீறி கால நீட்டிப்பு செய்கிறது: அண்ணாமலை
பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்: செல்வப்பெருந்தகை!
17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள்
மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகம் செய்கிறது திமுக அரசு –அன்புமணி ராமதாஸ் வேதனை
சமூக வலைதளங்களில் இளையராஜா படத்தை பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதி மன்றம்
மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!
{{comments.comment}}