சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மகாதீபம் ஏற்றும் மலை அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் உயிரிழந்த நிலையில், மகா தீபத்தை காண அப்பகுதி வழியாக பக்தர்களுக்கு மலையேற அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அதீத கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். குறிப்பாக திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் மலையின் பின்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு வீடுகளின் மேல் விழுந்ததில் நான்கு சிறுவர்கள் உட்பட 7 பேர் மண் குவியலில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்த 7 பேரையும் மீட்ட சம்பவம் காண்போரை பதைபதைக்க வைத்தது.

உலக பிரசித்தி பெற்ற அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை மகா தீப திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கப்பட்டது. கொடி ஏற்றிய பிறகு, இன்று மூன்றாவது நாள் அண்ணாமலை மற்றும் உண்ணாமலை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா புறப்பாட்டிற்கான சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து டிசம்பர் 12ஆம் தேதி வரை இறைவன் ஒவ்வொரு நாளும் திருவீதி உலா வந்து அவர்களுக்கு அருள் பாலிப்பர்.
டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். இந்த மகாதீபம் ஏற்றப்படும் போது இறைவன் ஜோதி வடிவில் காட்சியளிப்பதை காண கோடான கோடி பக்தர்கள் ஒரே இடத்தில் அண்ணாமலையாரை தரிசிக்க ஒன்று கூடுவர். தீபம் ஏற்றும் நிகழ்ச்சியின்போது, கிரிவலம் வரும் 2500 பேர் முறையாக மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் அடையாள அட்டை பெற்று மகா தீபத்தை காண மலையேற அனுமதி பெறுவது வழக்கம்.
ஆனால் நடப்பு ஆண்டில் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றும் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.தீபம் ஏற்ற செல்லும் நடைபாதையில் 500 மீட்டர் உயரம், 150 மீட்டர் அகலத்திற்கு செங்குத்தாக மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் முற்றிலும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. மேலும் தீபம் ஏற்ற திருவண்ணாமலையை சுற்றி பல்வேறு பாதைகளிலும் மக்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
திருவண்ணாமலை மலைப்பாதை அனைத்தும் முற்றிலும் சேதம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளதால், வரும் 13ஆம் தேதி ஏற்றப்படும் மகா தீபத்தை காண மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்க கூடாது என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்து வருகிறது. மலையேறும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என வனத்துறையினரும் கூறி வரும் நிலையில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா அல்லது தடை விதிக்கப்படுமா என்பது என்பது குறித்த அறிவிப்பு இன்று மாலை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே முடிவுகள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Women's Day: மகளிருக்கு வாக்குறுதிகள்.. நாளை மாமல்லபுரத்தில் அறிவிக்கிறார் விஜய்.. தவெக தகவல்
வாக்கு சதவீதத்தை காட்டி அழுத்தம் தர மாட்டோம்: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்
கூட்டணி வெற்றிக்காக தியாகம் செய்ய காங்கிரஸ் தயார்: மாணிக்கம் தாகூர் பல்டி
ராஜ்யசபா தேர்தல் 2026.. திமுக, அதிமுக, காங்., பாமக, தேமுதிக வேட்பு மனுக்கள் ஏற்பு
ஓபிஎஸ் போடி தொகுதியில் போட்டி?...விருப்பமனு அளித்த மகன் ரவீந்திரநாத்
தமிழக கவர்னர் ஆர் .என். ரவியை அதிரடியாக மாற்றியதற்கு இது தான் காரணமா?
திமுக கூட்டணியில் கமல் கட்சிக்கு எத்தனை சீட்? வெளியான பரபரப்பு அப்டேட்
துபாயில் ஏவுகணை தாக்குதல் ...மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல்
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் ரிசல்ட் ...இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து மதுரை பெண் சாதனை
{{comments.comment}}