நோயை விட கொடிய மருந்து...ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பற்றி முதல்வர் விமர்சனம்

Mar 09, 2026,05:52 PM IST

சென்னை: மத்திய அரசு முன்னெடுத்து வரும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' (One Nation One Election) திட்டமானது, ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பையே சிதைக்கும் முயற்சி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார். இத்திட்டத்தை "நோயை விடக் கொடிய மருந்து" என்று அவர் வர்ணித்துள்ளார்.


ஜனநாயகத்தின் அடிப்படைக்கே ஆபத்து :


இந்தியாவில் மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கு பல்வேறு மாநில கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஏதோ ஒரு நிர்வாகச் சிக்கலைத் தீர்ப்பதற்கான வழியாகத் தோன்றலாம். ஆனால், உண்மையில் இது நோயைக் குணப்படுத்துவதற்காக அதைவிடக் கொடுமையான ஒரு மருந்தைத் தருவதற்கு சமம்" என்று குறிப்பிட்டுள்ளார்.




இத்திட்டம் நமது நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையையே தலைகீழாக மாற்றும் தன்மையைக் கொண்டது. தேர்தல் நடத்துவதில் இருக்கும் சில நடைமுறை மற்றும் நிர்வாகச் சிக்கல்களைக் காரணம் காட்டி, ஜனநாயகத்தையே முடக்க நினைப்பது முற்றிலும் தவறானது. நிர்வாக வசதிக்காக இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமநிலையையும், கூட்டாட்சி தத்துவத்தையும் சீர்குலைக்கக் கூடாது. மக்களின் அடிப்படை வாக்குரிமை மற்றும் பிரதிநிதித்துவ உரிமைகளை மாற்றி அமைக்கும் முயற்சி ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல.


நிர்வாக வசதியா? ஜனநாயக முடக்கமா?


தேர்தல் செலவுகளைக் குறைப்பது மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு இடையூறு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களை முன்வைத்து இத்திட்டம் ஆதரிக்கப்படுகிறது. இருப்பினும், மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்றும், ஒருவேளை மாநில அரசுகள் கலைக்கப்பட்டால் மீண்டும் தேர்தல் நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்றும் முதல்வர் சுட்டிக் காட்டியுள்ளார். நிர்வாக வசதிகளை விட மக்களின் உரிமைகளும், நாட்டின் ஜனநாயகப் பண்புகளுமே மிக முக்கியம் என்பதை முதல்வர் ஸ்டாலின் இந்த அறிக்கையின் மூலம் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார். தேசிய அளவில் விவாதிக்கப்பட்டு வரும் இந்த விவகாரத்தில், தமிழக முதல்வரின் இந்த காட்டமான விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்