முதல்ல.. ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு நீங்க இருப்பீங்களா?.. அண்ணாமலைக்கு செல்வப் பெருந்தகை பதிலடி!

May 22, 2024,10:23 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக அலுவலகத்தை முற்றுகையிட வரப் போகும் 10 பேருக்கு சாப்பாடு தருகிறோம் என்று கூறியிருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு பத்து பேர் கூட பாஜக அலுவலகத்தில் இருக்க மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக காங்கிரஸ் தலைவர் அறிவித்துள்ளார். போராட்டம் எப்போது என்று முன்கூட்டியே சொன்னால் அதில் கலந்து கொள்ளப் போகும் 10 பேருக்கும் சாப்பாடு ஏற்பாடு செய்து தருகிறோம் என்று நக்கலாக கூறியிருந்தார்.




இதற்கு தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


ஒடிசா மாநிலம் புரி ஸ்ரீகெஜந்நாதர் ஆலய கருவூலத்தின் சாவி தமிழகத்தில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது, ஒட்டுமொத்த தமிழர்களையும் திருடர்கள் என்று இழிவுபடுத்தும் செயலாகும். பிரதமர் மோடியின் இந்தப் பேச்சால் ஒட்டுமொத்த தமிழர்களும் அவருக்கு எதிராக கடும் கோபத்தில், கொந்தளிப்பில் உள்ளனர்.


மோடியின் தமிழர் விரோதப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தேன். 


ஜனநாயகத்தின் மீது முற்றிலும் நம்பிக்கை இல்லாத கட்சியான பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியின் இந்தப் போராட்ட அறிவிப்பை கிண்டலடித்திருக்கிறார். முற்றுகைப் போராட்டத்திற்கு வரும் 10 பேருக்கு உணவு தயார் செய்து வைப்பதாக கூறியிருக்கிறார்.


வரும் ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கப் போவதில்லை. ஏனெனில், கடந்த 2004ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியை இழந்த பிறகு 2014 வரை கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு அந்த அலுவலகத்தில் அப்போது மாநில அமைப்பு பொதுச் செயலாளராக இருந்த மோகன்ராஜுலு மட்டுமே இருந்தார். இந்த வரலாற்றை எல்லாம் அண்ணாமலைக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.


ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு கமலாலயத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை முன்கூட்டியே தெரிவித்தால் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உணவு ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறோம். அதுமட்டுமல்ல,   கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், தமிழ்நாடு எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டது என்பது பற்றியும், மோடி ஆட்சியில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் பற்றியும் புத்தகம் வழங்கத் தயாராக இருக்கிறோம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!

news

பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை

news

Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

news

வாழும் வரையில்.. வகை தொகையில்லாமல்.. வரிகளைக் கொட்டிய. வாலிபக் கவி!

news

மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!

news

கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

கம்பனும் கவியும்

news

என் இராமனே!

அதிகம் பார்க்கும் செய்திகள்