தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!

Feb 12, 2026,02:47 PM IST

- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ 


பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரை பாயும் என்ற பழமொழிக்கு ஏற்ற தினத்தை இன்று கொண்டாடுவோம்.


அப்படி என்ன தினம்?


தேசிய தொலைந்த பைசா தினம் (12.2.2026) .. பெயரைக் கேட்டதுமே சூப்பரா இருக்குல்ல.. ஆனால் இப்படியும் ஒரு தினம் கொண்டாடப்படுதுங்க.


“பைசா” என்பது சிறிய பண அலகாக இருந்தாலும், அதன் மதிப்பு மிகப் பெரியதாகும்.


 “சிறு துளி பெரு வெள்ளம்” என்ற பழமொழிபோல், நாம் சிறுக சிறுக சேமிக்கும் பைசாக்கள்  பெரிய தொகையாக மாறுகிறது. வீட்டு பொருளாதாரத்தில் சிறு சேமிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் ஒரு தினமாக பைசா தினம் கொண்டாடப்படுகிறது.


இந்த நாள், பணத்தின் மதிப்பை சேமிப்பின் மூலம் சேமிப்பதை  புரியவைக்கிறது. ஒவ்வொருவர் வீட்டிலும் அவரவர்கள் வசதிக்கு ஏற்ப தங்களால் முடிந்த பணத்தை சேமிக்க வேண்டும் .


 


இந்திய நாணய முறையில் முக்கியமான அலகு ரூபாய் ஆகும். ஒரு காலத்தில் 1 ரூபாய் என்பது 100 பைசா என்ற அடிப்படையில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன.அரை ரூபாய் என்பது 50 பைசாவை குறித்தது. 1 பைசா, 5 பைசா, 10 பைசா, 25 பைசா, 50 பைசா போன்ற நாணயங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன . 


விலைவாசி உயர்வால் 1 பைசா போன்ற பல நாணயங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டன. இருப்பினும், பைசா என்பது ஒரு நாணயம் மட்டுமல்ல.அது சிக்கனம், சேமிப்பு, மற்றும் பண மதிப்பு என்பவற்றின் அடையாளமாக மாறிவிட்டது.


நாணயங்களில் மன்னர்களின் உருவமும், நான்கு முக சிங்கத்தின் உருவம் ,தேசத் தலைவர்களின் உருவங்கள் மற்றும் சிறப்பு தினத்தின் முக்கிய புகைப்படங்களும் நாணயத்தில் வெளியிடப்படுகின்றன.


தினமும் குழந்தைகளிடம் நம்மால் முடிந்த சிறிய தொகைகளை கொடுத்து சேமிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவர் வீட்டிலும் கட்டாயம் மண் உண்டியல் அல்லது மர உண்டியல் பயன்படுத்தி சேமிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். 


பள்ளிகளில் சிறுபிள்ளைகளுக்கு குச்சி வங்கி (Piggy Bank) மூலம் சேமிப்பு பழக்கம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. பைசா தினத்தை கொண்டாடுவதன் மூலம் பணத்தின் மதிப்பை உணர்ந்து சேமிக்க கற்றுக் கொள்வோம். வீண் செலவுகளை தவிர்த்து குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த குழந்தைகளிடம் சேமிக்க கற்றுக் கொடுப்போம்.


குழந்தைகள், பெற்றோரிடம் பணம் கேட்கும் போது,  ஒரு பைசா சம்பாதிப்பதற்கு ஒருவர் எவ்வளவு உழைக்கிறார் என்பதை சொல்லித் தர வேண்டும். எறும்பை போல் சேமிக்க பழக வேண்டும் என்று குழந்தைகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். 




சிறு சேமிப்புகள் பெரிய வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதை புரிந்து கொள்வோம். நாம் அனைவரும் பைசா தினத்தில் , பணத்தினை சேமித்து சிக்கனமாக வாழ உறுதி எடுத்துக்கொள்வோம்.


வரவு எட்டணா செலவு பத்தணா என்பதைப் போல் செலவு செய்யாமல் வரும் வருமானத்தில் ஒரு தொகையை சேமிப்பிற்கு ஒதுக்கி மீதம் உள்ளதை செலவு செய்ய வேண்டும். இவற்றை நாம் அனைவரும் கடைப்பிடித்தால் நாம் கடனாளியாக இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்.


கடன் அன்பை முறிக்கும் என்ற பழமொழியை உணர்ந்து நாம் அனைவரும் இன்றைய தொலைந்து போன பைசா தினத்தில் இருந்து கட்டாயம் பணத்தை சேமிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்