-ஸ்வர்ணலட்சுமி
சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்றுடன் (டிசம்பர் 26) மண்டல பூஜை காலம் நிறைவடைகிறது. இன்று இரவு 10 மணிக்கு
ஹரிவராசனம் பாடப்பட்டு, கோவில் நடை அடைப்பட்டு விடும். இதனால் தங்க அங்கியில் காட்சி தரும் சாமி ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் சபரிமலை சன்னிதானத்தில் கூடி வருகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி துவங்கி, மண்டல பூஜை நடைபெற்று வந்தது. 41 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜை காலம் டிசம்பர் 26ம் தேதியான இன்றுடன் நிறைவடைகிறது. எப்போதும் மூடப்பட்டிருக்கும் ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மலையாள மாதப்பிறப்பின் போது மட்டும் 5 நாட்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். கார்த்திகை மாதம் முதல் தேதி துவங்கி இந்த 41 நாட்கள் மண்டல பூஜையின் போது தான் மிக அதிக நாட்கள் சபரிமலை கோவில் திறந்திருக்கும்.

41 நாட்கள் கொண்ட விரத காலத்தை ஒரு மண்டலம் என்கிறோம். அதாவது எந்த ஒரு பூஜை, விரதம், மருந்து உண்ணுவது, மந்திர ஜபம் செய்வது என எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து 41 நாட்கள் தொடர்ந்து செய்தால் அது நிச்சயம் நான் நினைக்கும் பலனை தரும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அப்படி 41 நாட்கள் கடுமையாக விரதம் இருந்து, காலை-மாலை இரு வேளையும் ஐயப்பனுக்கு பூஜை செய்து, உரிய விரத முறைகளை பின்பற்றி வழிபாடு செய்து வந்தால் அந்த பக்தரின் விருப்பத்தை ஐயப்பன் நிச்சயம் நிறைவேற்றி வைப்பார்.
அவர்களின் வாழ்க்கை, தலையெழுத்து என அனைத்தும் மாறும். ஆனால் அனைவராலும் 41 நாட்கள் தொடர்ந்து ஐயப்பனுக்கு உரிய அனுஷ்டான முறைகளின் படி ஐயப்பனுக்கு அபிஷேகம், பூஜைகள் என செய்ய முடியாது. இதனால் தான் சபரிமலை வரும் பக்தர்கள் அனைவருக்காகவும் அவரின் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக சபரிமலையில் மண்டல பூஜை நடத்தப்படுகிறது.
வருடம் முழுவதும் தவக்கோலத்தில் காட்சி தரும் சாமி ஐயப்பன், மண்டல பூஜை நிறைவடையும் போது, பந்தள மன்னனுக்கு அளித்த வாக்கின் படி, தங்க அங்கி அணிந்து பந்தள இளவரசனாக காட்சி தருவார். இதற்காக ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் சாமி ஐயப்பனின் தங்க அங்கி, வீர வாள் உள்ளிட்டவைகள் ஊர்வலமாக தலைசுமையாக சபரிமலை சன்னதிதானத்திற்கு எடுத்து வரப்பட்டு, சாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்படும். இந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி தங்க அங்கி புறப்பாடு துவங்கியது. டிசம்பர் 25ம் தேதியான நேற்று மாலை சன்னிதானம் வந்தடைந்த தங்கி அங்கி, சாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது.
மண்டல பூஜை காலத்தின் நிறைவு நாளான இன்று (டிசம்பர் 26) பகல் 12 மணி துவங்கி, 12.30 வரை மண்டல பூஜை நடைபெறும். அந்த சமயமத்தில் பக்தர்களுக்கான தரிசனம் நிறுத்தப்படும். மாலை 4 மணிக்கு பிறகே பக்தர்கள் மீண்டும் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். இரவு 10 மணிக்கு பிறகு ஹரிவராசனம் பாடப்பட்டு, இரவு 11 மணிக்கு சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டு விடும். மீண்டும் டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படும். ஜனவரி 14ம் தேதி மகரசங்கராந்தி அன்று மாலை மகரஜோதி தரிசனம் நடைபெறும். அதற்கு பிறகு மகர மாத பூஜைகளுக்காக 5 நாட்கள் கோவில் திறந்து வைக்கப்பட்டு, பக்தர்கள் ஜனவரி 19ம் தேதி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 20ம் தேதி மீண்டும் கோவில் நடை அடைக்கப்படும்.
தங்க அங்கி ஊர்வலம், மண்டல பூஜை நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் விர்சுவல் க்யூ வழியாக 50,000 முதல் 60,000 வரையிலான பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் வழியாக 5000 பக்தர்களும் சாமி தரிசனம் செய்யப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்து, பக்தர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் நேற்று மாலை முதல் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, ராஜ அலங்காரத்தில் காட்சி தரும் சாமி ஐயப்பனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் சபரிமலை சன்னிதானத்தில் குவிந்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Tn elections 2026 தமிழக தேர்தலுக்கு இன்னும் 2 நாள் மட்டுமே... பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது
திடீரென வரும் உறவும்… திடீரென விலகும் மனமும்!
Poems.. மனதில் என்றும் அழியாமல் தைக்கும் கலையே.. கவிதை!
சிந்தனைச் சிதறல்.. உலகின் உன்னதமான மொழி எது தெரியுமா?
When Care Turns Blind.. அன்போடு சுட்டிக் காட்டப்படும் தவறுகள்.. நல்லதே!
Deepa Ravi Poem: நீலவானும் நீயும் நானும்
Amarnath Yathra.. எனது கண்ணோட்டத்தில் அமர்நாத் யாத்திரை.. ஒரு பயணக் கட்டுரை (1)
Monday Motivational Poem: தொலைந்து போக ஆசை!
Siva Puranam: அரும் பெரும் ஞானபொக்கிஷம் ... சிவபுராணம் (1)
{{comments.comment}}