Tsunami: சுனாமி ஆழிப்பேரலை தாண்டவமாடி 20 வருஷமாச்சு.. மீனவர்கள் குடும்பம் குடும்பமாக அஞ்சலி!

Dec 26, 2024,07:23 PM IST

சென்னை: சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்த உறவினர்களின் நினைவிடங்களில் இன்று தமிழக மீனவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் சுனாமி என்னும் ஆழிப்பேரலை தாக்கியது. அதுவரை உலகம் பார்த்திராத கோர தாண்டவம் அது. 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த கடல் அலை பேயாட்டத்தில் சிக்கி உயிரிழந்தனா். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமானார்கள்.




தமிழ்நாடு இந்த கோர தாண்டவத்தில் சிக்கிக் கொண்டது. திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு கடலோரப் பகுதியும் தப்பவில்லை. வடக்கில் சென்னை முதல் தெற்கே குமரி வரை மிகப்பெரிய சேதத்தை சந்தித்தன. குறிப்பாக குமரி மாவட்டத்தை சுற்றியுள்ள குளச்சல், கொட்டில்பாடு, சொத்தவிளை பிள்ளைத்தோப்பு உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்கள் முழுவதும் நீருக்கு இறையாகின. இதில்  ஏராளமானோர் உயிரிழந்தனர். அதேபோல் உயிரிழந்தவர்களில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 199 பேர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். பலர் தங்களின் குழந்தைகளையும் உறவினர்களையும் தொலைத்து கடும் இன்னலுக்கு ஆளாகினர்.


குமரி முனையில் கம்பீரமாக வீற்றிருக்கும் திருவள்ளுவர் சிலையையே மறைக்கும் உயரத்தில் சுனாமி பேரலைகள் எழுந்து வியாபித்த காட்சியை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. அந்தத் திருவள்ளுவர் சிலைக்கு அப்போது வயது 5 தான் ஆகியிருந்தது என்பது நினைவிருக்கலாம். 


சுனாமி என்னும் ஆழிப்பேரலை  தாக்குதல் நடந்தது இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த  சுனாமி நினைவு தினம்  ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 26 ஆம் தேதி  அனுசரிக்கப்படுகிறது. இன்று இருபதாவது ஆண்டு சுனாமி நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் கீழ மணக்குடி கிராமத்தில் சுனாமி பேரலையில் சிக்கி

இறந்த உறவினர்களின் நினைவிடங்களில் ஏராளமான மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர்.


அதேபோல் சுனாமி நினைவு தினத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் சுற்றுவட்டார கடற்கரை பகுதிகளை ஒட்டி உள்ள மீனவர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆகியோர்  கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதே சமயத்தில் இன்று துக்கத்தை அனுசரிக்கும் விதமாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.


அதேபோல் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பாகவும், பல்வேறு அமைப்பினர் சார்பாகவும் கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.


தமிழ்நாடு முழுவதும் சுனாமி நினைவு தினத்தை மீனவர்கள் குடும்பம் குடும்பமாக அனுசரித்து வருகின்றனர். அனைத்துக் கடற்கரைகளிலும் சிறப்பு பிரார்த்தனைகளும் இன்று நடைபெறுகின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸால் காயப்பட்டுள்ளோம்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. திமுக

news

ரோஜா பூ கொடுத்து புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்ற தேவகோட்டை ஆசிரியர்கள்!

news

புதிய கல்வியாண்டு.. அனைவரும் இணைந்து அறிவுச் சுடரை உயர்த்திப் பிடிப்போம்!

news

Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!

news

மாணவர் நலனைக் காப்பாற்றுங்கள்.. அமைச்சரிடம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை

news

Vipuvana sangadahara chaturthi: விபுவன சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருந்து விநாயகனை வழிபடுவோம்

news

லீவு முடிஞ்சாச்சு.. பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. உற்சாகமாக திரண்டு வந்த மாணவ, மாணவியர்!

news

Om Sai.. அன்பே சாய்!

news

Remembering SPB: S. P. பாலசுப்ரமணியம் .. ஒரு தெய்வீக ஆன்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்